ஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்
டி20 போட்டிகள் ஆனது பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே உரித்தான போட்டியாகும். பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் பேட்டிங்கிலிருந்து கிளம்பும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் ரசிப்பர். இருப்பினும், டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆரம்பகால ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாகவே இருந்து வந்தனர்.ஆனால், சமீப காலங்களில் பவுலர்கள் தங்களது பௌலிங் ஸ்டைலையும் நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகின்றனர். ஒரு தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியே கடந்த சில ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணியாக உருவெடுத்து வந்துள்ளன.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களை ஆகச்சிறந்த பந்துவீச்சாளர்களை உள்ளடக்கி தங்களின் பவுலிங் திறனை வெளிப்படுத்தி வருகிறது. ரஷித் கான், புவனேஸ்வர் குமார் போன்ற டி20 போட்டிக்ளுக்கே உரித்தான பந்துவீச்சாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது ஐதராபாத் அணி. இந்த சீசனில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளில் உள்ள பந்துவீச்சாளர்கள் தங்களது அணிகளுக்கு ஒரு வெற்றி காரணியாக அமைய முற்படுவர். உலக கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் பல வீரர்கள் இடையிலேயே தங்கள் அணியை விட்டு பிரிய உள்ளனர். இந்த அனைத்துக் காரணிகளையும் கொண்டு ஒரு தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட மூன்று அணிகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
#3.டெல்லி கேப்பிட்டல்ஸ்:
இந்தியாவின் தலைநகரை மையமாகக் கொண்டு கடந்த சீசன் வரை "டெல்லி டேர்டெவில்ஸ்" என்று அழைக்கப்பட்டு வந்த அணி தற்போது, "டெல்லி கேப்பிடல்ஸ்" என தனது பெயரை மாற்றி உள்ளது. இந்த அணிக்கு கடந்த ஆண்டு ஒரு கடினமான தொடராகவே அமைந்தது. ஒரு நல்ல பவுலிங் கூட்டணி அமையாததே அதற்கான காரணங்களில் ஒன்று. இருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதிய பௌலிங் கூட்டணியை உருவாக்கி உள்ளது, இந்த அணி நிர்வாகம்.
கடந்த சீசனில் நியூசிலாந்தை சேர்ந்த ட்ரென்ட் பௌல்ட் ஒரு அட்டகாசமான தொடரை அளித்திருந்தார். மேலும், கடந்த சீசனின் ஆரம்ப தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரிஸ் மற்றும் ரபாடா காயம் காரணமாக விலகியதால் டெல்லி அணிக்கு கடும் சவாலே உருவானது. ஆனால், இந்த சீசனில் இவர்கள் இருவரும் நிச்சயம் தொடர் முழுவதுமே விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆல்ரவுண்டரான அக்சார் படேல் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவருடன் அமித் மிஸ்ரா மற்றும் இளம் வீரரான சந்திப் லேமிச்சனே ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்துள்ளனர்.
ஹர்ஷல் பட்டேல் மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் பங்கு டெல்லி அணியின் பவுலிங்கை மேலும் வலுப்படுத்தும். இது மட்டுமல்லாது, புதிதாக அணியில் இணைந்துள்ள வெஸ்ட் இண்டீசீன் கீமோ பால், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நத்து சிங் மற்றும் உள்ளூர் நாயகனான இசாந்த் சர்மாவும் இந்த பவுலிங் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் ஆவர்.