ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்

Richard matley will not feature in this IPL auction
Richard matley will not feature in this IPL auction

2019 ஐபிஎல் சீசனின் ஏலம் இந்த மாதம் 18ம் தேதி ஜெய்ப்பூரில் துவங்க உள்ளது. இதுவரை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக 232 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 1003 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் 8 அணியினர் பங்குபெறுகின்றனர். மொத்தம் 70 வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு தேர்வு செய்ய உள்ளனர். இந்த 12-வது ஐபிஎல் சீசனின் ஏலத்தை, வழக்கமாக தொகுத்து வழங்கிய ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக ஹக் எட்மேட்ஸ் தொகுத்து வழங்க உள்ளார். அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து 59 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் , ஹாங்காங், அமெரிக்கா, அயர்லாந்து, போன்ற நாடுகளிலிருந்தும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அடுத்த வருடம் நடைபெறும் உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் போன்றோர் இந்த ஏலத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். யுவராஜ் சிங், அக்சர் படேல், முகமது சமி போன்ற இந்திய வீரர்களுக்கு 1 கோடியை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். மேலும், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 9 சர்வதேச வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை தொகையை இரண்டு கோடியாக நிர்ணயம் செய்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஏலம் குறித்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் இந்திய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் கடும் போட்டி நிலவக் கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவ்வாறு அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இங்கு காணலாம்.

3.ஜெய்தேவ் உனத்கட்:

Jaydev Unadkad
Jaydev Unadkad

2018-ம் ஆண்டு இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் ஜெய்தேவ் உனத்கட். தற்போது இவரின் அடிப்படை தொகையாக 1.5 கோடி உள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 11.5 கோடிக்கு ஏலம் போன உனத்கட், தன் திறனை சரியாக வெளிப்படுத்தாத காரணத்தினால் ராஜஸ்தான் அணியிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற 5 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ள இவர், 2017-ம் ஆண்டு புனே அணிக்காக விளையாடி 24 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், 15 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இதுவரை 62 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 8 போட்டிகளில் 16 விக்கெட்களை கைப்பற்றி தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார், உனத்கட். இந்திய ஆடுகளங்களை கணித்து விளையாடக்கூடிய கைதேர்ந்த பந்துவீச்சாளரான இவர், இந்த சீசனில் நன்கு ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூறியது போல இந்திய வீரர்களுக்கு ஏலத்தில் எப்போதும் பஞ்சம் இருக்கும் பட்சத்தில் இவர் இம்முறையும் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள வீரராக இருப்பார் என்பதில் மாற்று கருத்தில்லை.

2. சர்ஃபராஸ் கான்:

Sarfaraz Khan
Sarfaraz Khan

மும்பையில் பிறந்த இந்த இளம் வீரர், ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் தொடர்ந்து ஏழு முறை அரைசதத்தை கடந்த வீரர் என்ற சாதனை படைத்ததனால் அனைவராலும் அறியப்பட்டார், சர்ஃபராஸ் கான். இவர் , 2015-ம் ஆண்டு முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடர்ந்து நான்காண்டுகள் விளையாடி வந்துள்ளார் தனது முதல் சீசனில் பெங்களூர் அணி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கினார். 2016ஆம் ஆண்டு சீசனில் 212.90 என்ற மிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்த போதிலும் பல ஆட்டங்களில் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஃபிட்னஸ் காரணமாக அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட இவர் கடந்தாண்டு பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட்டார். கடந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியவர் 51 ரன்களை மட்டுமே குவித்தார். பெங்களூர் அணி இவரை வெளியேற்ற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும், இறுதி கட்ட நேரத்தில் அதிரடி காட்டும் இவர், எந்த ஒரு அணிக்கும் ஒரு சிறந்த பின்கள பேட்ஸ்மேனாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த ஐபிஎல்-ல் ஒரு பெரிய தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பு உள்ள வீரராக இவரும் உள்ளார்.

1. அக்சர் படேல்:

Aksar Patel
Aksar Patel

ஐபிஎல்-ல் 2014ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்ற அக்சர் படேல், இம்முறை கிங்ஸ் XI அணியில் தக்க வைக்கப்படவில்லை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவரே, கடந்த சீசனில் தக்க வைக்கப்பட்ட ஒரே பஞ்சாப் வீரர். பஞ்சாப் அணி இவரை தக்க வைக்கப்பட்டதன் மதிப்பு 12.5 கோடி. இதற்காக அணி நிர்வாகம் இவருக்கு செலுத்திய தொகை 6.75 கோடியாகும். நடந்து முடிந்த சீசனில் விளையாடி வெறும் 3 விக்கெட்களையும் 80 ரன்களையும் மட்டுமே இவரால் எடுக்க முடிந்தது. இந்த இடதுகை ஸ்பின்னர், இதுவரை ஐபிஎல் தொடரில் பங்குகொண்டு 1765 ரன்களையும் 68 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பலமுறை டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்குப் பின்னர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இருப்பினும், இவர் ஒரு சிறந்த டி20 வீரராவார். 2019 சீசனுக்கான ஏலத்தில் இவருக்கு 1 கோடி என்ற அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். நிச்சயம், இவர் பல கோடிகளில் ஏலம் போக வாய்ப்புள்ளவர் என்பதை வரும் 18ம் தேதி நிரூபிப்பார் என எதிர்பாக்கலாம்.

Quick Links