3. ஐசிசி டி20 உலக கோப்பை 2007 - தென் ஆப்பிரிக்கா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்களில் தனது சிறந்த பங்களிப்பால் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த யுவராஜ் சிங், அக்காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார்.
டி20 உலகக்கோப்பை அறிவிக்கப்பட்ட நேரத்தில், அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் டி20 இந்திய அணியை உருவாக்கினர். எம் எஸ் தோனி அந்த அணிக்கு தலைமையேற்றார். யுவராஜ் சிங் அணிக்கு துணை கேப்டன் ஆனார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வெற்றிபெற்றது. பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த தொடரில் நீடிக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி. அந்த போட்டியில் ஐந்தாம் இடத்தில் களம் கண்ட யுவராஜ் சிங், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து ரசிகர்களை அமர்க்களப்படுத்தினார். 12 பந்துகளில் அரைசதத்தை கடந்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 41 ரன்களை குவித்து 2 ஓவர்கள் பந்துவீசி 8 ரன்களை கொடுத்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பிரெட் லீ வீசிய ஓவரில் 119 மீட்டர் சிக்சரை அடித்து அந்த ஓவரில் 21 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்களை குவித்து இந்திய அணி 188 ரன்களை பெற உதவினார். அந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் இறுதி போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்த இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.
4. ஐசிசி உலக கோப்பை 2011- இந்தியா
இந்த உலகக் கோப்பைக்கு முன்னர் ,அணியில் இடம்பெற சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் டோனியின் நம்பிக்கையால் அணியில் இடம் பெற்றார், யுவராஜ் சிங். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் யுவராஜ் சிங் இங்கிலாந்து ,அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து அரை சதங்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 143 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தபோது
சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன்களை குவிக்க தவறினாலும் தனது பந்துவீச்சில் ஆசாத் ஷபிக் மற்றும் யூனஸ் கான் ஆகியோரின் விக்கெட்களை கபளீகரம் செய்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். பின்னர் இறுதி போட்டியில் இலங்கையை சந்தித்த இந்திய அணி, கம்பீர் மற்றும் தோனியின் அசத்தலான ஆட்டத்தால் தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் தோனிக்கு பின் களமிறக்கப்பட்ட யுவராஜ் சிங், 24 ரன்களை குவித்தார். மேலும் அந்த தொடரில் 4 அரைசதங்கள் ஒரு சதம் உட்பட 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்த யுவராஜ் சிங்” தொடர் நாயகன் “ விருதை தட்டிச்சென்றார்.
5. கேன்சர் நோயுடன் போராட்டம்- 2011 மற்றும் 2012
2011 உலககோப்பை நடக்கும் நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டார் யுவராஜ் சிங் .மேலும் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும்போது ரத்த வாந்தியும் எடுக்க நேரிட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அமைந்தது. இதனால் அவர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி சில காலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக அமெரிக்காவுக்கு சென்று சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு மன தைரியத்துடன் போராடி புற்றுநோயில் இருந்து விடுபட்டார். இதன் காரணமாக இவர் கிரிக்கெட்டை விட்டு ஓராண்டு காலம் விலகி இருந்தார். பின்னர் புற்று நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ விரும்பி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ” யூ வி கேன் ” (YOU WE CAN) - ஐ நிறுவினார்.
கடும் போராட்டத்திற்கு பின்னர், 2012 நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பினார். தான் இந்திய அணிக்கு அறிமுகமானதை விட கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்தது கடினமான காலகட்டமாக இருந்தது என பின்னாளில் குறிப்பிட்டுள்ளார் .