#1.யுக்திகளை கடைபிடிக்கும் விராட்கோலி:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட புவனேஸ்வர்குமார் எதிர்பாராதவிதமாக ஆட்டத்தில் இருந்து விலக நேரிட்டது. இதனைக் கருத்தில் கொண்ட, விராட் கோலி ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை அழைத்து பந்துவீசச் செய்தார். அதன்படி, பந்து வீசிய விஜய்சங்கரும் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். அவர் மட்டும் அல்லாது மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவையும் சிறப்பாக பயன்படுத்தி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்த செய்தார், விராட் கோலி. அணியிலிருந்த மற்ற இரு சுழல் பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக பயன்படுத்தி வெற்றியும் கண்டார். அதன் பின்னர், நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் கடினமான சூழ்நிலையிலும் விஜய் சங்கரை பயன்படுத்தாமல் முகமது சமி, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரை மிகவும் சார்ந்திருந்தார், கோலி. மற்ற போட்டிகளில் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிற்கச் செய்து சில வெற்றிகளையும் கண்டுள்ளார், விராட் கோலி. ஆட்டத்தில் பலமுறை பீல்டிங்கை மாற்றி அமைத்தும் வந்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் சாதுர்யமாக செயல்படும் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அளவுக்கதிகமாக அப்பீல் செய்ததால் கோலிக்கு 25 சதவீத போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் போட்டிகளில் இதுவரை அணியில் களம் இறக்கப்படாத ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விராட் கோலி அணி இணைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.