2000-01 ஆண்டு முதல் இன்று வரை சிறப்பாக விளையாடியும் இந்திய அணியில் போதிய வாய்ப்பில்லாத 3 அதிர்ஷ்டமற்ற வீரர்கள்

 இந்தியா vs தென்னாபிரிக்கா டி20 போட்டி  
 இந்தியா vs தென்னாபிரிக்கா டி20 போட்டி  

இந்திய அணியை பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பான வீரர்களை பெற்றுள்ளது. 1980களில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களை பெற்றிருந்தது. 90'களில் டிராவிட், சச்சின் மற்றும் கங்குலி அதன் பிறகு தற்போது கோஹ்லி, தோனி போன்ற சிறந்த வீரர்களை உள்ளடக்கியுள்ளது. 90'களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு தெரியும் இந்த விளையாட்டு எப்படிப்பட்டது என்று. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்ட சச்சின் விளையாடுவதை காணவே தொலைக்காட்சியை வாடகைக்கு வாங்கி வந்தவர்கள் உண்டு. சூதாட்ட சர்ச்சைகளால் சோர்ந்து போயிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்தவர் கங்குலி. இவரின் பங்கை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தானாக முன்வந்து கேப்டன் பொறுப்பை ஏற்றது மட்டுமில்லாமல், வெற்றி பாதைக்கும் அழைத்து சென்றார்.

இவரை தொடர்ந்து வந்த முன்னாள் கேப்டன் தோனியும் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி சென்றார். 28 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்தார். அதற்கு முன்னதாக முதல் முதலாக நடைபெற்ற டி20 தொடரின் உலகக்கோப்பையும் பெற்று தந்தார். நன்றாக விளையாடினால் தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சிலர் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் அதிர்ஷ்டமில்லாத காரணத்தால் அணியில் இடம் கிடைக்காமல் இருப்பர். அப்படிபட்ட 3 வீரர்களை பற்றிய தொகுப்பை தான் இங்கே பார்க்க போகிறோம்.

#3 அமித் மிஷ்ரா

அமித் மிஷ்ரா
அமித் மிஷ்ரா

இவர் இந்திய அணியின் மிகக் குறைவாக மதிக்கப்பட்ட சூழல் பந்து வீச்சாளர். முதல் தர போட்டியில் 500 விக்கெட்டுக்கு மேல் எடுத்தது மட்டுமில்லாமல், லிஸ்ட் ஏ போட்டிகளில் 242 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்திய அணிக்காக குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2003ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் பங்குபெற்ற மிஸ்ரா, இரண்டு போட்டிகளுடன் ஓரங்கட்டப்பட்டார். இவர் இந்திய அணிக்காக அறிமுகமான சமயத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் அணில் கும்ப்ளே உச்சத்தில் இருந்தனர். அதனாலேயே இவரால் அவ்வளவு எளிதில் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அறிமுகமாகி 5 வருடத்திற்கு பிறகு 2008ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு பெற்றார்.

இந்த வாய்ப்பு கூட கும்ப்ளேவின் காயம் காரணமாகத்தான் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்து முத்திரை பதித்தார். கும்ப்ளே, அதே வருடம் ஓய்வு பெரும் எண்ணத்தில் இருந்ததால், மிஸ்ராவிற்கு இந்த ஆட்டம் திருப்புமுனையாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததே வேறு. திடீரென ஜடேஜா, அஸ்வின் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச தொடங்கியதால், இவரது வாய்ப்பு கேள்விக்குறியானது. தற்போது சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசுவதால் மிஷ்ரா அணிக்கு திரும்புவது என்பது கடினமான ஒன்றுதான்.

#2 வாசிம் ஜாபர்

வாசிம் ஜாபர்
வாசிம் ஜாபர்

உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களுள் ஒருவர் வாசிம் ஜாபர். 18 வருடங்களுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் ஜாபர், இதுவரை விளையாடிய அனைத்து ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரஞ்சி தொடரில் இரண்டு முறை 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். மும்பையை பூர்வீகமாக கொண்ட 40 வயதான இவர், தற்போதும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் 11,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த ஜாபர், இந்திய அணியில் இடம் பிடிப்பதும் பின்பு வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்கப்படுவதும் என மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டார். இந்தியாவிற்காக 2000ம் ஆண்டில் தனது முதல் டெஸ்டில் விளையாடிய ஜாபர், வாய்ப்பு கிடைத்தும் நழுவவிட்டார்.

இதுவரை இந்தியாவிற்காக 5 சதம் மற்றும் இரண்டு இரட்டை அடித்துள்ள இவரின் பேட்டிங் ஸ்டைல் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிக்கே ஒத்துப்போகும்.அதன் பிறகு தான் சேவாகின் சரித்திரம் இந்திய அணியில் தொடங்கியது. வேகமாக ரன் சேர்ப்பதில் வல்லவரான சேவாகின் ஆட்டம் ரசிகர்களை மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் சங்கத்தையும் ஈர்த்தது. இவரின் வருகையால் தொடர்ந்து அணியில் இருந்து ஜாபர் ஓரம்கட்டப்பட்டார். இவ்வளவு திறமையும் சாதனையும் இருந்தும் கூட இந்திய அணியில் இடம் கிடைக்காத ஜாபரை என்ன சொல்லி அழைப்பது.

#1 சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என சொல்லலாம். 2005ம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் போட்டியில் பங்குபெற்ற ரெய்னா, ஆரம்ப காலத்தில் 5 அல்லது 6ம் இடத்தில களமிறங்கி ஆடிவந்தார். இதனால் இவர் பங்குபெற்ற முதல் 11 போட்டிகளில் 5 முறை மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார். போதிய வாய்ப்பு கிடைக்காததால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக விளையாடிய ரெய்னா, இதுவரை 5 ஒரு சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 3ம் வீரராக களமிறங்கும் இவர், விளையாடிய அனைத்து சீசனில் 400 ரங்களுக்கு மேல் ககுவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால் சர்வதேச போட்டிகளில் இவர் நினைத்தது நடக்கவில்லை. தொடர்ந்து 4 அல்லது 5வது வீரராகவே களமிறக்கப்பட்டார். சீனியர் வீரர்களின் ஓய்விற்கு பிறகு டாப் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரெய்னாவிற்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லியின் வளர்ச்சி ஒரு சிறிய தடையாக அமைந்தது. தற்போது உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்து வரும் இவர், தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுவாரா என்பதை காலம் பதில் சொல்லும்.

Quick Links