2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்

Indian Team
Indian Team

இந்திய கிரிக்கெட் வாரியம் 2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று(ஏப்ரல் 15) அறிவித்துள்ளது. தன்மானம் கொண்ட இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துனைக்கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வருட உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியும் ஒன்றாக உள்ளது. அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. மிடில் ஆர்டரில் சொதப்பி வந்த கடந்த கால இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் தற்போது தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி சிறப்பாக உள்ளது.

பெரும்பாலான வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அணியின் கேப்டன் மற்றும் அனுபவ வீரர்கள் தேர்ந்தெடுக்கும் வீரர்களே இறுதி XIஆக உலகக் கோப்பையில் விளையாடும். பெரும்பாலும் இந்திய அணி கடைசியாக விளையாடிய இரு தொடர்களில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்திய வீரர்கள் ஆடும் XI-ல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 ஆல்-ரவுண்டர்களை(ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர்) தேர்வு செய்துள்ளது.

இந்திய உலகக் கோப்பை அணி: ரோகித் சர்மா (துனைகேப்டன்), ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்.

அணியில் 2015 உலகக் கோப்பைக்கு பிறகு நீண்ட காலமாக அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பதிலாக விஜய் சங்கருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் இங்கு 2019 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்.

#3 கலீல் அகமது

Khaled Ahmed
Khaled Ahmed

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது கடந்த வருடத்திலிருந்து விளையாடி வந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியிலிருந்து கலீல் அகமது கழட்டிவிடப்பட்டார். அந்நிய மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இவரது பந்துவீச்சு சீரானதாக இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக்குழு இவரை அணியில் சேர்க்கவில்லை.

ஆஸ்திரேலியா தொடரில் ஓடிஐ கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பிய முகமது ஷமி சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். 2018ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் கலீல் அகமது. இந்திய அணி தற்போது அறிவித்துள்ள இந்திய உலகக் கோப்பை அணியில் மாற்று வேகப்பந்து வீச்சாளர் என யாரும் இல்லை. இந்திய தேர்வுக்குழுவும் இதனை கருத்தில் கொள்ளவில்லை. அத்துடன் நியூசிலாந்து தொடருக்கு பிறகு கலீல் அகமதுவை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவும் இல்லை.

இவரது உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் கனவு 4 வருடங்களுக்கு தாமதமாகியுள்ளது. வருங்காலத்தில் சிறந்த பௌலராக திகழும் வாய்ப்பு இவருக்கு கண்டிப்பாக உண்டு.

#2 ரிஷப் பண்ட்

Rishap pant wc Dream washout
Rishap pant wc Dream washout

இந்திய கிரிக்கெட் வாரியம் வலிமையான அணியை 2019 உலகக் கோப்பையில் அணுப்பும் விதத்தில் மாற்று விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்டிற்கும் பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளது.

டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்திய ரிஷப் பண்ட் ஓடிஐ போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக உபயோகப்படுத்தி கொள்ளாத காரணத்தால் 2019 உலக கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பிங் இடத்திற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் பிசிசிஐ அனுபவ வீரர் தினேஷ் கார்த்திகை தற்போது தேர்வு செய்துள்ளது.

இளம் வயதில் சிறப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தை கடைநிலையில் களமிறங்கி ரிஷப் பண்ட் வெளிபடுத்தி வந்தார். ஆனால் ஒரு நீண்ட இன்னிங்ஸ் ஓடிஐ கிரிக்கெட்டில் இவரிடமிருந்து வெளிபடாத காரணத்தால் 2019 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளார் ரிஷப் பண்ட். தினேஷ் கார்த்திக் கடந்த இரு வருடங்களாக இந்திய அணியின் ஃபினிஷராக உள்ளார். அத்துடன் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் சிறந்த கடைநிலை பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக திகழ ரிஷப் பண்ட்-டிற்கு அதிக வாய்ப்புள்ளது.

#1 அம்பாத்தி ராயுடு

Ambati Rayudu
Ambati Rayudu

2019 உலக கோப்பை அணியில் இந்திய அணியின் நம்பர்-4 வரிசையில் களமிறங்க அதிக வாய்ப்புள்ள வீரராக பார்க்கப்பட்ட அம்பாத்தி ராயுடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் மிடில் ஆர்டரில் ஓரளவிற்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார் ராயுடு. அப்பொழுது பார்க்கும்போது இவர்தான் உலகக் கோப்பையில் இவர் சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு இருப்பார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்திறன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் ராயுடுவிடன் அந்த திறன் சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இல்லாத காரணத்தால் கடைசி 2 போட்டிகளிருந்து நீக்கப்பட்டார்.

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை குவித்த ராயுடு அடுத்து நடந்த ஆஸ்திரேலிய தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய தேர்வுக்குழுவிற்கு மேலும் தலைவலியை அதிகபடுத்தியது. அத்துடன் ஐபிஎல் தொடரிலாவது சிறப்பான ஆட்டம் வெளிபடுத்துவார என பார்க்கப்பட்டபோதும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இதனால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிடில் ஆர்டரில் இறக்கியது.

இதனால் ராயுடு தற்போது ஆட்டத்திறன் இல்லாமல் இருக்கிறார் என தேர்வுக்குழு கணித்துவிட்ட காரணத்தால் இவரை இந்திய உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் விஜய் சங்கர் நம்பர்-4ல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய காரணத்தால் ராயுடுவிற்கு பதிலாக தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் 2019 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார.

Quick Links

Edited by Fambeat Tamil