ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்

கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்
கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில்

இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முதலில் டி20 தொடரில் களமிறங்கிய இந்திய அணி , முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியதால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடரின் கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் தொடங்க உள்ளது.பல கிரிக்கெட் வல்லுனர்கள் இந்தியாவிற்கே பெரும்பாலான வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சில ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா இந்தத் தொடரை எளிதில் கைப்பற்றும் என்று ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் உந்துகோலாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக தடையில் உள்ளனர். கடந்த வாரம் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு வார்னர் மற்றும் ஸ்மித் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அம்மனுவை நிராகரித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, முதன்மையான அணி போல் விளையாடவில்லை எனப் பலரும் விமர்சித்தனர். 4-1 என இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் சில நல்ல விஷயங்களும் அரங்கேறின. அதாவது இந்திய அணியின் பந்துவீச்சு, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய பந்துவீச்சாளர்கள் மாற்றங்களைப் புகுத்தி திறம்பட பந்துவீசினர். அதேபோல் ஆஸ்திரேலியாவிலும், இந்தியா அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு பவுலிங்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

அந்தத் தொடருக்கு பின், இந்திய மண்ணில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்தியா எளிமையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள இளம் ஆஸ்திரேலிய அணி, அனுபவம் இல்லாமல் இருந்தாலும் சொந்த மண்ணில் ஆடுவதால் அவர்களை குறைத்து மதிப்பிட இயலாது. மேலும் வார்த்தை சண்டைக்கு (sledging) அவர்களிடம் அளவே இருக்காது.

எனவே, ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிக்கு இந்தியா மேற்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களை பற்றி இங்கு காண்போம்.

#3. பௌலிங்கில் அசத்த வேண்டும்

ஜஸ்பிரிட் பும்ராஹ் விக்கெட் எடுக்கும் முனைப்பில்
ஜஸ்பிரிட் பும்ராஹ் விக்கெட் எடுக்கும் முனைப்பில்

அந்நிய மண்ணில் இந்தியாவின் பௌலிங் சற்று மந்தமாக இருப்பது வழக்கம். ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்தியா அதை தகர்த்துக் காட்டியது. அதே உத்வேகத்தை ஆஸ்திரேலியாவில் இந்திய பவுலர்கள் செயல்படுத்தினால் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், இந்திய தேர்வு குழு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. அதில் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு நிகராக உள்ளது என்றே கூறலாம். இந்திய அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ராஹ், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

#2. பேட்டிங்கில் நல்ல தொடக்கம்

கே எல் ராகுல்
கே எல் ராகுல்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா தோற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நல்ல தொடக்கம் அமையாததே. ஆம், அந்த தொடரில் தொடக்க பேட்ஸ்மேன்களை மாற்றிக் கொண்டே இருந்தார் அணியின் கேப்டன் கோலி.

நல்ல தொடக்கம் அமைந்தால், பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள் அதே உத்வேகத்தோடு ரன் சேகரிப்பில் ஈடுபடுவர். கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் ஃபார்முலாவாக இது திகழ்கிறது. இதன் காரணமாகவே பல அணிகள் இந்தியாவை எதிர்கொள்ளும்போது தொடக்க ஆட்டக்காரர்களை அவுட் ஆக்குவதில் குறியாக இருப்பர்.

இந்தத் தொடரில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக வீரர் முரளி விஜய், கே.எல்.ராகுல் மற்றும் இளம் வீரர் ப்ரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக அணியில் உள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் முரளி விஜய்க்கு மட்டுமே உண்டு.

முரளி விஜய்க்கு இங்கிலாந்து தொடர் சரியாக அமையவில்லை. முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளான “கவுண்டி”-யில் பங்குபெற்று நன்றாக ஆடி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார்.

அதேபோல் கே.எல். ராகுல் இங்கிலாந்து தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை. கடைசி போட்டியில் சதம் அடித்திருந்தாலும் சற்று மந்தமாகவே காணப்பட்டார். எனவே இந்தத் தொடர் அவருக்கு வாழ்வா சாவா தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததன் மூலம் தன்னை இந்த கிரிக்கெட் உலகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்ட இளம் வீரர் ப்ரித்வி ஷா அணியில் இருப்பது கூடுதல் பலம். இவர் ஆடும் XI-ல் இடம் பெறுவது சந்தேகம்தான். எனினும் விஜய் மற்றும் ராகுல் சொதப்பினால் அணியில் இவரை நிச்சயமாக தேர்வு செய்வார் கேப்டன் கோலி.

#.1 மிடில் ஆர்டரின் நிலைத்தன்மை

ரஹானே இங்கிலாந்து தொடரில்
ரஹானே இங்கிலாந்து தொடரில்

இந்தியாவின் மிடில் ஆர்டர் தொடக்க ஆட்டக்காரர்களை நம்பியே உள்ளது. அவர்கள் சொதப்பினால் இவர்களும் சொதப்புவது வழக்கம்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவின் மிடில் ஆர்டர் தேர்வுக்குழுவினருக்கு தலைவலியாக இருந்து வந்துள்ளது. காரணம் எந்த ஒரு வீரரும் நிலைத்து ஆடாமல் இருத்தல். அதேபோல் கேப்டன் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் அணியை மாற்றிக்கொண்டே இருத்தல் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கிலாந்து தொடரில் கோலி மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். இங்கிலாந்து பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அதே நோக்கத்தில் இந்த தொடரிலும் கோலி ஆடினாலும் அவருக்கு துணை நிற்க ஏற்ற பேட்ஸ்மேன் அமைய வேண்டும். கடைசி டி20 போட்டியில் தனது அரைசதத்தின் மூலம் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் கோலி. அதே டச்சுடன் டெஸ்ட் தொடரிலும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜின்க்யா ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி அணியில் இடம் பெற்றுள்ளனர். ரஹானே இங்கிலாந்து தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தாலும், இந்த தொடரில் தனது முழு ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஹாரி தனது முதல் போட்டியில் அதுவும் இந்திய அணி விக்கெட்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அரை சதம் அடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், இந்தியாவின் லிமிடெட் ஓவர்ஸ் ஹீரோவான ரோஹித் ஷர்மாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் சொதப்பியிருந்த ரோஹித், வாய்ப்பு கிடைத்தால் இந்த தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளிலும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கான்செப்ட் : அவிக் தாஸ்

எழுத்து &மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்

Quick Links