சர்வதே கிரிக்கெட்டில் ஒரு ரன் கூட எடுக்காத இந்திய வீரர்!!

Abhishek Nayar
Abhishek Nayar

கால்பந்து விளையாட்டிற்கு அப்புறம் அதிகமாக அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அந்த கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரரின் கனவு என்ன என்றால் நாம் ரன்களை அடித்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் நம் தேசிய அணியில் இடம் பெறுவது அவ்வளவு எளிது அல்ல. அதற்காக கடின உழைப்பும் அதிக திறமையும் வேண்டும். அவ்வாறு தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக். அவ்வாறு இந்திய அணியில் இடம் கிடைத்தும் ஏன் ஒரு ரன் கூட இவரால் எடுக்க முடியவில்லை என்பதை இங்கு காண்போம்.

இவரது முழுப் பெயர் அபிஷேக் நாயர். இவரது வயது 35. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணியில் 2009 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பிர், ராஹுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், யுவ்ராஜ் சிங், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, யூசுஃப் பதான் என சீனியர் வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் இடம் பிடித்தார் அபிஷேக் நாயர்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த போட்டி முழுமையாக நடைபெறவில்லை. மழை குறுக்கிட்டதால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இவர் பேட்டிங் செய்வதற்கு முன்பே அணி வெற்றி அடைந்தது. இதற்கு அடுத்த போட்டியான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிதும் நிற்காமல் தொடர்ந்து மழை பெய்ததால் அந்த போட்டி கைவிடப்பட்டது. இரண்டு போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் பேட்டிங் செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்துடன் நாடு திரும்பினார் அபிஷேக் நாயர். இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு 2 மாதங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார் அபிஷேக் நாயர். இந்த போட்டியில் 130 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. அணியின் ஸ்கோர் 104 ரன்களாக இருந்த போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க 4வது விக்கெட்டிற்கு விராட் கோஹ்லியுடன் இணைந்தார் அபிஷேக் நாயர். ஆனால் அபிஷேக் நாயரின் துரதிர்ஷ்டம், அவர் தன் சர்வதேச கிரிகெட் வாழ்க்கையில் முதல் ரன்னை எடுப்பதற்க்குள் அதிரடியாய் ஆடிய விராட் கோஹ்லி அணியை வெற்றி பெற வைத்தார். இறுதி வரை 7 பந்துகளை சந்தித்த அபிஷேக் நாயர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

3 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று 1 ரன் கூட எடுக்காத ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் அபிஷேக் நாயர். அதன்பின்பு இந்திய அணியில் அதிகமாக சீனியர் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். எனவே அபிஷேக் நாயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil