உலககோப்பை தொடரானது இங்கிலாந்து நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது மூன்று வாரங்களை கடந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே நடைபெற்ற 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது மோதிய 5 பேட்டிகளில் 2-ல் வெற்றியும் ஒரு பேட்டி டிரா என ஐந்தாம் இடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்டைனிஸ் இந்த போட்டியில் மீண்டும் இடம் பிடித்தார்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சார்பில் வழக்கம் போல பின்ச் மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி வந்தனர். தேவையான பந்துகளை பவுண்டரி விளாசியும், தேவையில்லாத ஷாட்களை ஆடாமலும் அணிக்கு நல்ல அடித்தளத்தை இந்த ஜோடி அமைத்து தந்தது. சிறப்பாக ஆடிவந்த வார்னர் தனது அரைசதத்தை கடந்தார். அதன் பின்னர் அதிரடியை காட்டிய பின்ச்-ம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. அரைசதத்தை கடந்ல பின்ச் 51 ரன்களில் இருந்த போது சவுமியா சர்க்கார் வீசிய பந்தில் ரூபெல் உசேனிடம் கேட்ச் ஆனார்.
அதன் பின் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான உஸ்மான் காவாஜா களமிறங்கினார். இவரும் வார்னருடன் இணைந்து அதிரடியாக ஆடி வந்தார். இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய வார்னர் கடந்த போட்டியைப் போன்றே இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இது இந்த தொடரில் இவரது இரண்டாவது சதம் ஆகும். மறுமுனையில் வங்கதேச பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த காவாஜா தனது அரைசதத்தை கடந்தார். இதன் பின்னும் இந்த ஜோடி ஓயவில்லை. இவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த வங்கதேச அணி பல முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் எதுவும் அவர்களுக்கு பலனளிக்கவில்லை. வார்னரின் கேட்ச் மற்றும் ரன் அவுட் ஆகியவற்றை தவறவிட்டதே இவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது. சதமடித்த பின் வெளுத்து வாங்கிய வார்னர் உலககோப்பை தொடரில் தனது 150 ரன்னையும் பதிவு செய்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் துர்தஷ்டவசமாக 166 ரன்களில் இருந்த போது சவுமியா சர்க்காரின் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.
இதன் பின்னர் அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். எதிர்பார்க்கப்பட்டது போலவே அதிரடியாக ஆடிய அவர் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். அதே ஓவரில் காவாஜாவும் 89 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்தார். பின் வந்த ஸ்மித் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேற இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 381.ரன்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் சவுமியா சர்க்கார் 3 விக்கெட்டுகளும், முஸ்தபிசூர் ரகுமான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் களமிறங்கினர். போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே சவுமியா சர்க்கார் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதன் பின் இந்த உலககோப்பை தொடரின் நாயகனான ஷகிப் அல் ஹாசன் களமிறங்கினார். அவர் அனுபவ வீரரான தமீம் இக்பாலுடன் இணைந்து ஆடத் துவங்கினார். இந்த ஜோடி நிலைத்து ஆடி ரன்களை குவித்து வந்தது. சிறப்பாக ஆடிய தமீம் தனது அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷகீப் அல் ஹாசன் 41 ரன்களில் ஸ்டைனிஸ் பந்தில் வார்னரிடம் கேட்ச் ஆனார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் விக்கெட் கீப்பரான ரஹீம் களமிறங்கினார். மறுமுனையில் தமீம் இக்பால் 68 ரன்களில் இருந்த போது ஸ்டார்க் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இந்த அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து களமிறங்கிய முகமதுல்லா அணிக்கு நம்பிக்கையை அளித்தார்.
தேவைப்படும் ரன் அதிகமாக இருந்தாலும் இந்த ஜோடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்த இருவரும் பின்னர் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை கடந்தனர். கடைசி 5 ஓவர்களில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு78 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வரை ரஹீம் மற்றும் முகமதுல்லா இருவரும் களத்தில் இருந்ததால் போட்டி வங்கதேச அணியின் பக்கம் தான் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் முகமதுல்லா குல்டர் நைல் பந்தில் ஆட்டமிழக்க ஆட்டம் அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறியது. அதன் பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹீம் தனது ஏழாவது சதத்தினை பூர்த்தி செய்தார். இருந்தும் இவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 333 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் போட்டியை ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி 166 ரன்கள் குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.