பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் களமிறங்கினர். போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே சவுமியா சர்க்கார் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட்டானார். அதன் பின் இந்த உலககோப்பை தொடரின் நாயகனான ஷகிப் அல் ஹாசன் களமிறங்கினார். அவர் அனுபவ வீரரான தமீம் இக்பாலுடன் இணைந்து ஆடத் துவங்கினார். இந்த ஜோடி நிலைத்து ஆடி ரன்களை குவித்து வந்தது. சிறப்பாக ஆடிய தமீம் தனது அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷகீப் அல் ஹாசன் 41 ரன்களில் ஸ்டைனிஸ் பந்தில் வார்னரிடம் கேட்ச் ஆனார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் விக்கெட் கீப்பரான ரஹீம் களமிறங்கினார். மறுமுனையில் தமீம் இக்பால் 68 ரன்களில் இருந்த போது ஸ்டார்க் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இந்த அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து களமிறங்கிய முகமதுல்லா அணிக்கு நம்பிக்கையை அளித்தார்.
தேவைப்படும் ரன் அதிகமாக இருந்தாலும் இந்த ஜோடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்த இருவரும் பின்னர் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை கடந்தனர். கடைசி 5 ஓவர்களில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு78 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வரை ரஹீம் மற்றும் முகமதுல்லா இருவரும் களத்தில் இருந்ததால் போட்டி வங்கதேச அணியின் பக்கம் தான் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் முகமதுல்லா குல்டர் நைல் பந்தில் ஆட்டமிழக்க ஆட்டம் அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறியது. அதன் பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரஹீம் தனது ஏழாவது சதத்தினை பூர்த்தி செய்தார். இருந்தும் இவரால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 333 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் போட்டியை ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி 166 ரன்கள் குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.