கே.எல்.ராகுல் , ஹர்திக் பாண்டியா மீதான தடையை நீக்கியது பிசிசிஐ

KL Rahul - Hardik Pandya

நடந்தது என்ன ?

கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மீதான தடையை திரும்ப பெற்றதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றம் விசாரணை குழு அமைக்கும் வரை இருவரும் இந்திய அணியில் விளையாடலாம் என பிசிசிஐ நிர்வாக குழு தெரிவித்துள்ளது . உயர்நீதிமன்றம் பிப்ரவரி மாதம் விசாரணை குழு அமைக்கும் என தெரிவித்துள்ளது.

இம்முடிவை அமிகஸ் க்யுரி மற்றும் திரு. பி.எஸ். நாராயணன் ஆகியோர் எடுத்துள்ளனர். இருவரின் மீதான தடையை பிசிசிஐ 11.01.2019 அன்று அறிவித்தது. இந்த விசாரணை இன்று வரை நிலுவையில் இருந்த நிலையில் பிசிசிஐ இருவரின் மீதான தனது குற்றச்சாட்டை திரும்ப பெற்றுள்ளது .

பின்னனி :

தனியார் தொலைக்காட்சியில் " காபி வித் கரண் " என்ற நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததால் கே.எல்.ராகுல், பாண்டியா ஆகியோர் உடனடியாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உடனே ஹர்திக் பாண்டியா பெண்கள் மீது பாலியல் ரீதியாகவும் , இனவெறி மற்றும் பெண்களை வெறுக்கும் விதத்தில் பேசியது தெரிந்தது . அத்துடன் சமூக வலைதளங்களில் இருவரின் மீதும் மிகுந்த வெறுப்பை ரசிகர்கள் தெரிவித்தனர் . உடனே பிசிசிஐ அணியிலிருந்து இருவரையும் நீக்கியது.

கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான ஓடிஐயில் பங்கேற்க இருந்ததையும் ரத்து செய்து இருவரும் உடனடியாக இந்தியா திரும்பும்படியும் தெரிவித்தது பிசிசிஐ . அத்துடன் நியூசிலாந்திற்கெதிரான தொடரிலிருந்தும் இருவரையும் நீக்கியது. ஹர்திக் பாண்டியா இதற்கு சமூக வலைதளங்களில் மண்ணிப்புச் செய்தியும் வெளியிட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ அவர்கள் இருவரையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறான கருத்தை கூறியதற்காக விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிகழ்விற்கு ஹர்திக் பாண்டியா டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்-மில் கூறியதாவது : " காபி வித் கரண் " நிகழ்ச்சியில் நான் அவ்வாறு கூறியதற்கு பெரிதும் வருந்துகிறேன். யார் மனதையாவது புண் படும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இயல்பாக எனது கருத்தை தெரிவித்து விட்டேன். அனைவரின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தது என்ன ?

இருவரின் மீதான தடையை பிசிசிஐ திரும்ப பெற்றதால் இந்திய அணி தேர்வில் இருவரின் பெயரும் மீண்டும் இடம்பெறும். தற்போது ஹர்திக் பாண்டியா நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் உள்ளுர் போட்டிகளிலோ அல்லது இந்திய - ஏ அணியில் இணைந்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு வீரர்களும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள் ஆவர். உலகக்கோப்பையில் இருவரின் பங்களிப்பும் இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். எனவே பிசிசிஐ இவர்களை அணியில் சேர்த்து இருவரின் மீதான விசாரணையை சுமுகமான முறையில் முடிக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது .

Quick Links