12வது உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வீரர்களின் செயல்பாடு சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. ஏனெனில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. மேலும், புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் நான்காமிடத்தில் யார் விளையாடப் போகிறார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பெரிதும் பேசப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு பதிலாக உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இணைக்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் நான்காம் இடத்தில் களமிறங்குவார் எனவும் கே.எல்.ராகுல் மாற்று தொடக்க வீரராகவும் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராகவும் அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். எனவே, 2011 தொடரை பின்னர் மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. அவ்வாறு, 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பங்காற்றவுள்ள ஐந்து சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.ஷிகர் தவான்:
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல் இந்திய அணியில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த 2015 உலகக் கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே உள்ளார், தவான். உலகக் கோப்பை தொடர், ஆசிய கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மிகப்பெரிய தொடர்களில் தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளார், ஷிகர் தவான். மேலும், தற்போது நடைபெற்று வரும் ஐபில் தொடரிலும் டெல்லி அணிக்காக இடம்பெற்று ஐபிஎல்லில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் வகித்து நம்பிக்கை அளிக்கிறார். எனவே, உலக கோப்பை தொடரில் இவரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு வெற்றிகளை குவிக்க உதவும் என எதிர்பார்க்கலாம்.
#4.மகேந்திர சிங் தோனி:
தனது நான்காவது உலக கோப்பை தொடரில் பங்கேற்கப் போகும் மகேந்திர சிங் தோனி இம்முறை அணியில் ஒரு வீரராக களம் இறங்கி இருக்கிறார். பல அனுபவங்களை கொண்ட தோனி இளம் வீரர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வெற்றி காண்பதில் வல்லவர். தற்போது, உலகின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார், மகேந்திர சிங் தோனி. இதுமட்டுமல்லாது, நெருக்கடி நிலைகளை கையாண்டு அணியின் வெற்றிக்கு பலமுறை பாடுபட்டுள்ளார். விராட் கோலிக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி அணிக்கு வெற்றிகளை உருவாக்கி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் தனது உச்சகட்ட ஃபார்மை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார், மகேந்திரசிங் தோனி.