இந்திய கிரிக்கெட் அணி 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி 3வது முறையாக சேம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் மோதிய நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு இவ்வருடம் தகர்க்கப்பட்டது. இது உலகில் உள்ள இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. காரணம் தகுதிச் சுற்றில் இந்திய அணி மிகவும் வலிமையுடன் திகழ்ந்ததே ஆகும். கண்டிப்பாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இப்பயணத்தில் 3 ஓடிஐ, 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாட உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பூம்ரா ஆகியோருக்கு ஓடிஐ/டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆகஸ்ட் 22 அன்று தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இருவரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இந்த டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் முதல் டெஸ்ட் சேம்பியன் ஷீப் போட்டியாகும். இந்தியாவில் 2023ல் ஓடிஐ உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், சில மாற்றங்களை இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான இந்திய அணி ஜீலை 19 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் இங்கு இந்திய ஒருநாள் அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி காண்போம்.
#1 தினேஷ் கார்த்திக்-ற்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர்
தினேஷ் கார்த்திக்கிற்கு 2019 உலகக்கோப்பை தொடரின் கடைநிலையில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் ஆடும் XIல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த இரு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 14 ரன்களே இவரால் குவிக்க முடிந்தது. நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் தினேஷ் கார்த்திக் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டை இழந்தது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இவர் விக்கெட் இழக்கும் போது இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தினேஷ் கார்த்திக் கடந்த சில வருடங்களாக தனது ஆட்டத்திறனை பெருமடங்கு மேம்படுத்தியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் சிறப்பானதாக இருந்தது இல்லை. இவரது பேட்டிங் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக உள்ளது. கடைநிலையில் ஆட்டத்தின் பொறுப்புணர்ந்து விளையாடும் திறன் கொண்டவர். 34 வயதான தினேஷ் கார்த்திக் 2023 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு. அத்துடன் இந்த உலகக்கோப்பை தொடருடன் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவும் வாய்ப்புள்ளது.
ஸ்ரேயஸ் ஐயரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அவர் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என தெரிகிறது. இவர் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் அருமையாக விளையாடும் திறன் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாகவும், சரியாக ரன் ஓட்டத்தையும் மேற்கொள்பவர். மேலும் களத்தில் அதிக ரன்களை தனது ஃபீல்டிங்கால் தடுக்கும் திறமை உடையவர்.
#2 விராட் கோலிக்கு (ஓய்வு) பதிலாக சுப்மன் கில்
விராட் கோலி கடந்த சில மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய 10 போட்டிகளிலும் விராட் கோலி தனது 100% பங்களிப்பை அளித்து வந்தார். உலகக்கோப்பை தொடரை இழந்த விரக்தியில் உள்ள கேப்டன் விராட் கோலிக்கு அதிலிருந்து மீண்டெள சிறிது நாட்கள் அவசியம். எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள்/டி20 தொடர்களில் இந்திய பேட்டிங் லெஜன்ட் விராட் கோலிக்கு ஓய்வளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்மன் கில் இந்திய வருங்கால நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இவர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் தகுதியும் ஆட்டத்திறனும் இவருக்கு உள்ளது. சுப்மன் கில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்தார் அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் நல்ல பேட்டிங்கை வெளிபடுத்தினார்.
சுப்மன் கில், விராட் கோலியின் இயல்பான மாற்று வீரராக உள்ளார். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இவர் மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான போட்டியில் சமீபத்தில் இரு அரைசதங்களை விளாசியுள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சுப்மன் கில்-ஐ அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இவர் அணியில் சேர்க்கப்பட்டால் கண்டிப்பாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
#3 கேதார் ஜாதவிற்கு பதிலாக க்ருநால் பாண்டியா
கேதார் ஜாதவ் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இவரது மாயஜால சுழற்பந்து வீச்சின் மூலம் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் கேதார் ஜாதவ். மற்ற பௌலர்கள் பந்துவீச்சில் அதிக ரன்கள் வாரி இறைக்கும் போது இந்திய அணியின் 6வது பௌலர் கேதார் ஜாதவ் பந்துவீச அழைக்கப்படுவார். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா சிறப்பான பௌலிங்கை தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மாற்று வீரராக இந்திய அணியின் ஆடும் XIல் இடம்பெற்றார்.
கேதார் ஜாதவ் நிதானமாக நிலைத்து விளையாடக் கூடியவர், பெரிய ஷாட்களை அவ்வளவாக அவர் விளையாட மாட்டார். இதற்கு சாட்சியாக உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டிகளில் டெத் ஓவரில் அவர் வெளிபடுத்திய பேட்டிங்கை கூறலாம்.
எனவே இவரக்கு மாற்று வீரராக க்ருநால் பாண்டியா மிகவும் சரியாக இருப்பார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் இந்திய டி20 அணியில் தனது இடத்தை உறுதி செய்து வைத்துள்ளார். கடைநிலையில் சில பெரிய ஹிட் ஷாட்களை விளையாடும் திறன் கொண்டவர் க்ருநால் பாண்டியா. அத்துடன் தனது நுணுக்கமான பௌலிங் மூலம் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துபவர். இவர் ஒரு சிறந்த முப்பரிமாண வீரர் ஆவார்.
#4 ஜாஸ்பிரிட் பூம்ரா-விற்கு (ஓய்வு) பதிலாக நவ்தீப் சைனி
சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஜாஸ்பிரிட் பூம்ரா தான் ஒரு சிறந்த பௌலர் என மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார். உலகின் நம்பர் 1 பௌலரான இவர் இந்திய பௌலிங்கின் முதுகெலும்பாக உள்ளார். உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறந்த வீரராகவும் திகழ்ந்தார். மேலும் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை வெல்ல தனது அதிரடி பௌலிங் மூலம் உதவியாக இருந்தார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் பூம்ராவை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஓடிஐ/டி20 தொடர்களுக்கு அனுப்ப இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை.
தொடர்ந்து 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட சில பௌலர்களுள் நவ்தீப் சைனி-யும் ஒருவர். 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சில சிறந்த பௌலிங்கை வெளிபடுத்திய நவ்தீப் சைனிக்கு, இந்திய உலகக்கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம் கிடைத்தது. தற்போது மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான இந்திய-ஏ அணியில் சிறப்பான பங்களிப்பை நவ்தீப் சைனி அளித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது சற்று மேம்பட்ட வீரராக திகழும் இவர் பூம்ராவிற்கு மாற்று வீரராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#5 குல்தீப் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயஸ் கோபால்
கடந்த 4 மாதங்களாக குல்தீப் யாதவின் பௌலிங் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஐபிஎல் தொடரில் சில மோசமான பந்துவீச்சின் மூலம் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் ஆடும் XIலிருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரிலும் 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
இதனால் லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகாலுடன், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டார். குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்த சற்று தடுமாறியும், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பியும் வருவதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் அணியிலிருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது.
குல்தீப் யாதவிற்கு சரியான மாற்று வீரராக ஸ்ரேயஸ் கோபால் இருப்பார். 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெத் ஓவரில் பேட்ஸ்மேன் ஒருவர் தனது விக்கெட்டை இழந்து விட்டால் ஸ்ரேயஸ் கோபால் அந்த இடத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சரியான வீரராக இருப்பார். இவரது ஃபீல்டிங்கும் அற்புதமாக உள்ளது. இந்திய அணி வருங்காலத்தில் ஸ்ரேயஸ் கோபால் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை சுழற்பந்து வீச்சாளராக எடுத்துச் சென்றால் கண்டிப்பாக இருவரும் தங்களது முப்பரிமான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் இந்திய-ஏ அணியிலும் இடம்பிடித்து தனது இயல்பான ஆட்டத்திறனை ஸ்ரேயஸ் கோபால் வெளிக் கொண்டு வந்தார்.