உலககோப்பை தொடரானது இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மையான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது லீக் சுற்று இறுதி நிலையை எட்டியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான், தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இந்த முறை அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளன. இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் நான்காம் இடத்தினை பிடித்து அரையிறுதிக்கு நுழைய போராடி வருகின்றன. இந்நிலையில் இன்று பர்மின்ஹம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதார் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றனர்.
அதன் படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவந்தது. ரோகித் ஒருபுறம் அதிரடியாக ஆட மறுமுனையில் ராகுல் நிதானமாக ஆடிவந்தார். ரோகித் ஷர்மா 9 ரன்னில் இருக்கும் போது அவரின் கேட்சை மொரட்டஷா தவறவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர் வங்கதேசத்தை வறுத்தெடுத்தார். ரசிகர்களுக்கு வானவேடிக்கையாக சிக்ஸர் மழை பொழிந்தார் ரோகித் ஷர்மா. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ராகுலும் ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக ஆடத்துவங்கினார். சிறப்பாக ஆடிவந்த ரோகித் ஷர்மா இந்த உலககோப்பை தொடரில் தனது நான்காம் சதத்தினை பதிவு செய்தார். மறுமுனையில் ராகுல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த சில நிமிடங்களிலேயே ரோகித் ஷர்மா. சவுமியா சர்க்கார் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த விராத்கோலிக்கு அதிரடியாக ஆடும் கட்டாய நிலை ஏற்பட்டது. ஒருபுறம் அவர் ஆட ராகுல் 77 ரன்களில் ரூபெல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
தன் இந்திய அணியின் பேட்டிங்ல் தடுமாற்றம் ஏற்பட்டது. விராத்கோலி (26), பாண்டியா (0) ஆகியோர் ஒரே ஓவரில் அடுத்து முஸ்தபிசூர் ரகுமான் பந்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னர் ரிஷப் பந்த் தோணியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் தோணி வழக்கம் போல நிதானமாக ஆட மறுமுனையில் பந்த் தனது அதிரடி ஆட்டத்தை ஆடிவந்தார். ஆனால் துர்தஷ்டவசமாக அவர் 48 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் மூடிவில் 314 ரன்கள் குவித்தது. வங்கதேச ஆணி சார்பில் முஸ்தபிசூர் ரகுமான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.