17 இருதரப்பு ஒருநாள் போட்டிகள், 8 சர்வதேச ஒருநாள் போட்டிகள், ஐபிஎல், உலகக்கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களினால் ஏற்பட்ட 7 மாத கால இடைவெளிக்குப் பின்னர் வெள்ளை நிற பந்தில் கொடிகட்டி பறந்த, உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா ஆகஸ்ட் 22 அன்று ஆன்டிகுவா-வில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. மேலும் இந்த போட்டியானது ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷீப்பில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அணிக்காக வழங்கப்படும் தண்டாயுதத்தை தன்வசம் வைத்துள்ளது. அத்துடன் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் எவ்வாறு உள்ளது என்பது நமக்கு விளங்குகிறது.
கடந்த முறை இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்திருந்தபோது விராட் கோலி தனது முதல் இரட்டை சதத்தினை விளாசினார். அத்துடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகளில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரே இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அரங்கில் பெரும் ஆதிக்கத்தை செலுத்த அடித்தளமாக இருந்தது. இந்திய அணிக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த இரு டெஸ்ட் தொடர்கள்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2-1 என தோல்வியை தழுவியதும், இங்கிலாந்திற்கு எதிராக 4-1 என தோல்வியை தழுவியதுமாகும். 2016லிருந்து இந்திய அணி தொடர்ந்து சீரான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிபடுத்தி வருகிறது.
நாம் இங்கு 2016 முதல் டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு காரணமாக இருந்த 3 புள்ளிவிவரங்களைப் பற்றி காண்போம்.
#3 அதிக சதங்களை குவித்த பேட்டிங் குழு - 53
இந்திய அணி 2016 ஜனவரி 1லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தி 37.61 பேட்டிங் சராசரியுடன் 53 சதங்களை குவித்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க பேட்டிங் டெஸ்ட்டில் சுமாராகவே இருந்து வருகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாட்டு மண்ணில் மிகவும் மோசமான தொடகத்தை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அளிக்கிறது. ஆனால் பேட்டிங்கில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக திகழும் கேப்டன் விராட் கோலி மற்றும் நம்பர் 3 பேட்ஸ்மேன் புஜாரா ஆகியோர் பெரும் பங்களிப்பை இந்திய அணிக்கு கடந்த 3 வருடங்களாக அளித்து வருகின்றனர்.
விராட் கோலி (36 டெஸ்டில் 3619 ரன்கள்) மற்றும் புஜாரா (36 டெஸ்டில் 3006 ரன்கள்) ஆகியோர் டெஸ்டில் இந்திய பேட்டிங்கின் கவலையை போக்கி வருகின்றனர். 2016லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் இவர்கள் இருவரும் 2வது மற்றும் 3வது இடங்களை வகிக்கின்றனர்.
கடந்த வருட இறுதியில் நடந்த டெஸ்ட் தொடரில் புஜாராவின் அதிரடி ரன் குவிப்பால் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்தது. புஜாரா இத்தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்று 521 ரன்களை குவித்தார். விராட் கோலி 2016லிருந்து 14 சதங்கள், மற்றும் 3 டெஸ்ட் தொடர்களில் (2016ல் இந்தியாவில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர், 2017ல் இந்தியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், 2018ல் இங்கிலாந்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்) 500+ ரன்களை குவித்துள்ள உலகின் முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2016லிருந்து தற்போது வரை 6 டெஸ்ட் இரட்டை சதங்களை விராட் கோலி குவித்துள்ளார். இதுவரை இந்த அரிய சாதனையை எந்த பேட்ஸ்மேனும் படைத்ததில்லை.
2016 முதல் இந்திய அணி 53 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளனர். இதுவே இந்திய அணி அனைத்து இடங்களிலும் ஜொலிக்க முதன்மை காரணமாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 38 சதங்களை குவித்துள்ளது. அத்துடன் 2016 முதல் இந்திய அணி 13 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 500+ ரன்களை குவித்துள்ளது. இந்த சாதனையையும் வேறு எந்த அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்ததில்லை.
ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆட்டத்தை டெஸ்டில் வெளிபடுத்தி 42.16 சராசரியுடன் 1012 ரன்களை குவித்துள்ளார். இந்திய துணைக்கேப்டன் அஜீன்க்யா ரகானே 2016 முதல் கடும் சரிவைக் கண்டுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் கோலி மற்றும் புஜாராவிற்கு சமமான இன்னிங்ஸில் (55) களம் கண்டு 37.58 சராசரியுடன் 1869 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். 3வருடத்திற்கு முன்பு இந்தூரில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 188 ரன்கள் குவித்த அஜீன்க்யா ரகானே அதன்பின் ஒரு சதம் கூட விளாசியதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.