மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்

Team India.
Team India.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை, ஓடிஐ மற்றும் டி20யில் வைட் வாஷ் செய்து தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்திய அணி மண்ணின் மைந்தர்கள் மேற்கிந்தியத் தீவுகளை பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் வீழ்த்தியுள்ளது.

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 அன்று சர் விவ் ரிச்சர்டஸன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இருதரப்பு டெஸ்ட் தொடரானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் டெஸ்ட் சேம்பியன் ஷீப் என்று அறிவித்தபின் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் தனது முதல் வெற்றியை குவிக்க கடுமையாக உழைக்கும் என்பதால் இத்தொடரில் அனல் பறக்கும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்திய டெஸ்ட் அணியானது ஒருநாள்/டி20 அணியை விட சற்று மாறுபட்ட அணியாக இருக்கும். சில டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களுடன் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் இனைந்து‌ அணியில் இடம்பெற்றிருப்பர். கடந்த டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை‌ வெளிபடுத்திய சில வீரர்கள் தற்போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை சரியாக பயன்படுத்தி அணியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்களைப் பற்றி காண்போம்.

#4 ரவிச்சந்திரன் அஸ்வின்

Ravichandran Ashwin
Ravichandran Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர். அத்துடன் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக தற்போது வலம் வருகிறார். இவர் இவ்வாறு ஜொலிக்க காரணம், சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் அஸ்வினின் பௌலிங் ஒரே மாதிரியாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் முதன்மை ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். ஆனால் சமீப காலமாக நடந்த அந்நிய டெஸ்ட் தொடர்களில் அஸ்வினின் ஆட்டத்திறன் சிறிது மங்கியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் இவரைப் போலவே ஒரு சிறப்பான ஸ்பின்னர் அத்துடன் ஆல்-ரவுண்டர் திறனையும் தன்னிடத்தில் கொண்டுள்ளார். எனவே இந்திய அணி ஒரு ஸ்பின்னருடன் டெஸ்ட போட்டிகளில் களம் கண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின் இயல்பான ஸ்பின்னராக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.‌

அஸ்வின் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் பங்கேற்றார். அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் சிறந்த பௌலிங்கை அஸ்வின் மேற்கொண்டு இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இப்போட்டியில் அஸ்வின் தனது பௌலிங்கில் 149 ரன்களை அளித்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எதிர்பாராத விதமாக இதன் அடுத்த போட்டியில் காயம் காரணமாக அஸ்வின் விலகியதால் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அஸ்வின் கடந்த காலத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்‌. இவர் 4 போட்டிகளில் 23.18 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இரு சதங்களை கரேபியன் மண்ணில் குவித்துள்ளார். அஸ்வின் மீண்டுமொருமுறை இந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி இந்திய அணி நிர்வாகம் தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மாற்ற வேண்டும்.

#3 லோகேஷ் ராகுல்

KL Rahul
KL Rahul

கே எல் ராகுல் தற்போது அதிக விவாதத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது இவர் மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் இயல்பான வீரராக வலம் வருகிறார். ஆனால் சமீப காலமாக கே எல் ராகுலின் ஆட்டத்திறனை உற்று நோக்கினால் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகவைச் சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேனான இவர் கடந்த 3 தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கிறார் என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வாகும். கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா கே.எல்.ராகுலின் பேட்டிங் சராசரி முறையே 29.90, 18.50 மற்றும் 11.40 ஆகும். ராகுலின் கடந்த வருட‌ புள்ளிவிவரப்படி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான தொடக்க வீரரை கண்டெடுப்பதில் மிகுந்த நெருக்கடியை சந்தித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.‌

லோகேஷ் ராகுல் ஒரு சிறந்த ஆட்டத்திறனை கொண்ட அற்புதமான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அறிமுகமானபோது தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். ஆனால் சமீப காலமாக அந்த சீரான ஆட்டதத்தை இழந்துள்ளார். கே.எல்.ராகுலுக்கு மீண்டும் மீண்டும் அதிக வாய்ப்புகளை அணி நிர்வாகம் அளித்தாலும் அதனை பயன்படுத்தி கொள்ள தவறுகிறார். 2018ல் நடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் மட்டும் 149 ரன்கள் அடித்தார். அதன்பின் பெரிய இன்னிங்ஸ் எதுவும் இவரிடமிருந்து வெளிப்படவில்லை.

பிரத்வி ஷா காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிறுபிக்க வேண்டும். இந்த வாய்ப்பு ராகுலுக்கு இறுதி வாய்ப்பாக கூட இருக்கலாம். ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷீகார் தவான் போன்ற வீரர்கள் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

#2 அஜீன்க்யா ரகானே

Ajinkya Rahanae
Ajinkya Rahanae

அஜீன்க்யா ரகானே இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் துனைக்கேப்டன் ஆவார். ரகானே ஒரு டெக்னிக்கல் பேட்ஸ்மேன். நீண்ட நேரம் நிலைத்து விளையாடக்கூடியவர். இவர் அனைத்து வகையான மைதானங்களிலும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சமீப காலமாக இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை.

ரகானே கடைசியாக டெஸ்ட் போட்டியில் 2017 ஆகஸ்ட் அன்று இலங்கைக்கு எதிராக சதமடித்தார். அப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமான 132 ரன்களை ரகானே விளாசினார். அதற்கு பின் இரண்டு வருடங்களில் ரகானேவின் பேட்டிங் சிறப்பாக இல்லை. எனவே இனிவரும் காலங்களில் நன்றாக ரன் குவித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

இந்திய டாப் ஆர்டர், முக்கியமாக தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாக வெளிபடுத்தி வருகின்றனர். எனவே விராட் கோலி, புஜாரா மற்றும் ரகானே மட்டுமே ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். புஜாரா மற்றும் விராட் கோலி அனைத்து வகையான மைதானங்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ரகானே பெரிய இன்னிங்ஸை அமைத்து நிலைத்து விளையாட தவறுகிறார்.

ரகானே கடந்த சில டெஸ்ட் தொடர்களில் ஓரளவிற்கு சுமாரான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வந்தாலும், ஒரு நம்பர் 5 பேட்ஸ்மேனிடமிருந்து வெளிபடும் பெரிய இன்னிங்ஸ் தென்படவில்லை. இவர் 70 மற்றும் 80 ரன்களை கடந்து விடுகிறார், ஆனால் அதற்கு மேல் தொடர ரகானே சமீப டெஸ்ட் தொடர்களில் தடுமாறுகிறார். ரோகித் சர்மா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் ரகானே இடத்திற்கு கடும் போட்டி போடுவதால் இந்திய துனைக்கேப்டன் சிறப்பான மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.

#1 ரோகித் சர்மா

Rohit Sharma
Rohit Sharma

ரோகித் சர்மா இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியின் முன்னணி வீரர் ஆவார். குறிப்பிட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் தற்போது வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிபடுத்த தவறுகிறார். ஒரு அதிரடி பேட்ஸ்மேனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியவில்லை என்பது யாராலும் நம்பமுடியாத வகையில் உள்ளது.

2013ல் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தபோது நடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா அறிமுகமானார். முதல் இரு போட்டிகளிலும் இரு தொடர் சதத்தினை விளாசி அசத்தினார். அந்தச் சமயத்தில் இவரைக் காணும்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கொடி கட்டிப் பறப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. தனது அறிமுக டெஸ்ட் தொடருக்கு பின்னர் நடந்த டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா கடுமையாக தடுமாறி தனது இடத்தை டெஸ்ட் அணியிலிருந்து இழந்தார்‌.

அதன்பின் பல முறை டெஸ்ட் அணியில் கம்-பேக் செய்த ரோகித் சர்மாவால் வாய்ப்பை பயன்படுத்தி தனது இடத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் தக்க வைக்க இயலவில்லை. ரோகித் சர்மா கடைசியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளில் இடம்பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால் அந்த தொடர் முழுவதும் பங்கேற்க இயலவில்லை.

சமீப காலமாக ஹனுமா விகாரி நம்பர் 6 பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இருப்பினும் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிற்கு நம்பர் 6 பேட்டிங்கில் இந்த தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே ரோகித் சர்மா தேர்வுக்குழுவின் விருப்பத்திற்கேற்க சிறந்த பேட்டிங்கை இத்தொடரில் கண்டிப்பாக வெளிபடுத்தியாக வேண்டும்.

Quick Links