பல்வேறு இளம் வீரர்களுக்கு தங்களது திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க அச்சாரமாக திகழ்ந்து வருகிறது, இந்தியன் பிரீமியர் லீக் தொடர். இதன் மூலம் பல்வேறு வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து வருகிறார்கள். ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ரிஷாப் பன்ட் போன்றோர் இந்த ஐபிஎல் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த வீரர்களின் உரிய சான்றுகளாகும்.
வெறும் ஐபிஎல் பங்களிப்பு மட்டும் அல்லாது பல்வேறு உள்ளூர் போட்டிகளிலும் ஜொலிக்கும் வீரர்கள் சீனியர் அணியில் இடம் பெறுகிறார்கள் என்பது பலதரப்பட்ட தேர்வாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். அதுபோல, தங்களது அயராத உழைப்பின் மூலம் ஐபிஎல்-இல் ஜொலித்தும் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதிக்க தவறிய 5 வீரர்களைப் பற்றி காண்போம். இந்தத் தொகுப்பில் உள்ளோர் அனைவரும் குறைந்தபட்சம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணாமல் உள்ள வீரர்களின் பட்டியல் ஆகும்.
#5. இக்பால் அப்துல்லாஹ்:
இடக்கை சுழற்பந்துவீச்சாளரான அப்துல்லா ஒரு பின்கள பேட்ஸ்மேனும் கூட. இவர் ஆரம்பகாலங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் ஒப்பந்தமாகி விளையாடினார். மேலும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் மூன்றாவது அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கி, அந்த தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இவரே அந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் "வளர்ந்து வரும் வீரர்" என்ற விருதையும் வென்றார். அடுத்த ஆண்டே கொல்கத்தா அணிக்கு சுனில் நரின் வருகையால் வெகுசில போட்டிகளிலேயே களமிறங்கி வெறும் 4 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எகனாமி 6.53 என்ற வகையில் சிறப்பாக அமைந்தது. 2017 ஆம் ஆண்டு வரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதே நிலைமை தான் இந்த ஆண்டும் தொடர்கிறது. ஆனால், மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தொடர்ச்சியான பங்களிப்பு இருந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
#4. நித்திஷ் ராணா:
2017 ஆம் ஆண்டு ஆண்டு மும்பை அணிக்காக களம் இறங்கி அந்த தொடரின் முதல் பாதியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார், நிதீஷ் ராணா அடுத்த ஆண்டே கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் ஆகி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றி தான் பவுலிங்கிலும் சளைத்தவன் அல்ல என்றும் நிரூபித்தார். மேலும், கடந்த ஆண்டு ஒரு சிறப்பான ஐபிஎல் தொடராகவும் இவருக்கு அமைந்தது.
கடந்தாண்டு ஐபிஎல்லில் இவரது நிலையான பங்களிப்பு இருந்த போதிலும், தேர்வாளர்கள் எவரும் இவரை கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் ரஞ்சித் தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இதுவரை, இவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் நிச்சயம் இந்திய சீனியர் அணியில் இணைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.