தோற்றது கூட பிரச்சனை இல்லை, ஆனால் எப்படி தோல்வி அடைந்தோம் என்பது தான் பிரச்சனை- வில்லியம்சன் 

Kane Williamson
Kane Williamson

நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களது தோல்வியை பற்றி கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒரு நாள் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நியூசிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Rohit And Dhawan
Rohit And Dhawan

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் மிகச் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும், 150 ரன்களுக்கும் மேலாக அடித்தனர். அதன் பின்பு சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்து விட்டு சில நிமிடங்களில் அவுட்டாகி வெளியேறினார்.

தவான் அவுட் ஆகிய சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் 87 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 40 ரன்களை அடித்து விட்டு அவுட் ஆகினர். இறுதியாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது.

Man Of The Match Rohit Sharma
Man Of The Match Rohit Sharma

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல் மட்டும் அரைசதம் விளாசினார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Newzealand Cricket Team
Newzealand Cricket Team

இந்த போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களது தோல்வியை குறித்து கூறியது என்னவென்றால், "நாங்கள் தோற்றது கூட பிரச்சினை இல்லை. ஆனால் எப்படி தோல்வி அடைந்தோம் என்பதில் தான் பிரச்சனை உள்ளது. இந்திய அணி சிறப்பாக விளையாடினார்கள் அவர்களை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்".

"ஆனால் நாங்கள் தான் 2 ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட தவறி விட்டோம். இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் விக்கெட்டுகளை வேகமாக இழந்து விட்டோம். அடுத்து நடைபெறவிருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சி செய்வோம்" என்று கேன் வில்லியம்சன் தனது கருத்தினை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil