பவுன்சர் பந்து தாக்கியதில் இலங்கை வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி.

Australia v Sri Lanka - 2nd Test: Day 2
Australia v Sri Lanka - 2nd Test: Day 2

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பரா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ‘ஜோ பர்ன்ஸ்’, ‘டிராவிஸ் ஹெட்’ மற்றும் ‘குர்தீஸ் பேட்டர்சன்’ ஆகியோரின் அபார சதங்களின் உதவியால் இரண்டாம் நாளான இன்று 5 விக்கெட் இழப்பிற்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பிறகு தனது முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ‘லஹிரு திரிமன்னே’ மற்றும் ‘டிமுத் கருணரத்னே’ ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் புயல்வேக பந்துவீச்சை சமாளித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இந்நிலையில் ஆட்டத்தின் 31-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ‘பேட் கம்மின்ஸ்’ வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. மணிக்கு 142.4 கிலோமீட்டர் வேகத்தில் பவுன்சராக வீசப்பட்ட அந்தப் பந்தை ‘கருணரத்னே’ குனிந்து விலக முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக பந்து அவரது பின் கழுத்தில் பலமாக தாக்கியது.

Australia v Sri Lanka - 2nd Test: Day 2
Australia v Sri Lanka - 2nd Test: Day 2

பந்து தாக்கியவுடன் ‘கருணரத்னே’ தடுமாறி அந்த இடத்திலேயே கீழே விழுந்தார். உடனே ஆஸ்திரேலிய அணி வீரர்களும், போட்டியின் அம்பயர்களும் விரைந்து சென்று அவரின் காயத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் அவரால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலைமையில் இருந்ததால் உடனடியாக மைதானத்துக்குள் ‘ஸ்ட்ரக்சர்’ வரவழைக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் உடனடியாக காயத்தின் தன்மையை அறிவதற்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து காயத்தின் தன்மை பரிசோதிக்கப்பட்டது.

Australia v Sri Lanka - 2nd Test: Day 2
Australia v Sri Lanka - 2nd Test: Day 2

இதுகுறித்து இலங்கை அணி பயிற்சியாளர் ‘சண்டிகா ஹதருசிங்கா’ கூறுகையில், “தற்போது அவர் நலமாக உள்ளார். கழுத்தில்தான் அவர் தன் வலியை உணர்கிறார். எங்களுடன் அவர் நன்றாகவே பேசினார். ஆகவே பயப்படும்படியாக தற்போது எதுவும் இல்லை. பந்து தாக்கியதும் அவர் களத்தில் தடுமாறி விழுந்த போது நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் இப்பொழுது அவர் நலமாகவே உணர்கிறார்” இவ்வாறு ஹதருசிங்கா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் கூறுகையில், “கிரிக்கெட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சகஜம்தான். ஆனால் யாருமே இதுபோன்ற சம்பவங்களை விரும்ப மாட்டார்கள். அவர் கீழே விழுந்ததும் தனது கைகளை அசைத்து அவரது அணியின் ‘பிசியோ‘விடம் பேசியபோதுதான் நான் சற்று நிம்மதியாக உணர்ந்தேன். அவர் தற்போது நலமாக இருப்பார் என நம்புகிறேன்”. இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ‘பிலிப் ஹியூக்ஸ்’ சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ‘சீன் அபாட்’ வீசிய வேகப்பந்துவீச்சில் தலையில் காயமடைந்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தது நினைவிருக்கலாம்.

மேலும் கருணரத்னே வின் இந்த காயத்திற்கு முன்னதாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை அணி தனது உத்வேகத்தை இழந்து, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுடன் 123 ரன்கள் சேர்த்துள்ளது.

காயமடைந்துள்ள ‘கருணரத்னே’ இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகமே. இது இலங்கை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செய்தி : விவேக் இராமச்சந்திரன்

Edited by Fambeat Tamil