ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19 : ரிஷப் பண்ட் ஆடும்போதெல்லாம் என்னுடைய கவனம் முழுவதும் தொலைக்காட்சியிலேயே இருக்கும் - க்ளென் மாக்ஸ்வெல்

ரிஷப் பண்ட் மற்றும் மாக்ஸ்வெல்
ரிஷப் பண்ட் மற்றும் மாக்ஸ்வெல்

நடந்தது என்ன ?

ரிஷப் பண்ட் என்னதான் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆட முற்பட்டாலும், சிறிது நேரத்திற்குப் பின்பு அவுட் ஆகி விடுகிறார். அவரது நிலைத்தன்மை இல்லாத ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான க்ளென் மாக்ஸ்வெல் ரிஷப் பண்டின் ஆட்டத்திற்கு ரசிகராக மாறியுள்ளார்.

மேலும் ரிஷப் பண்ட் திறம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ள அவர், பண்ட் களத்தில் இருக்கும் போது தனது முழு கவனமும் தொலைக்காட்சியிலேயே இருந்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “சிறந்த திறன் கொண்ட பண்ட் தனது சக்தியால் பந்தை நேர்த்தியாக அடிப்பதை தான் பார்த்துள்ளோம், ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பந்துவீச்சாளரை திணறடிப்பது பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது, அவர் களத்திற்கு வரும்போதெல்லாம் எனது கண்கள் தொலைக்காட்சியிலிருந்து நீங்குவதில்லை” என்று கூறியுள்ளார்

பின்னணி

மேக்ஸ்வெல் மற்றும் பண்ட் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியிருந்தனர். தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தார். அதிரடியாக ஆடியிருந்த பண்ட் பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின்பு இந்தியா டி20 அணியிலும் ஒருநாள் அணியிலும் இடம் பெற்றார் பண்ட்.

பின்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகி, அணியிலும் இடம் பெற்றிருந்தார் பண்ட். அங்கு நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் விக்கெட் கீப்பராக நீடிக்கிறார் பண்ட்.

தொகுப்பின் மையக்கரு

இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களம் கண்ட போதே இவர் மீது எதிர்பார்ப்புகள் கூடியிருந்தன. ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் எவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் தன்னை மாற்றி அமைத்துக் கொள்வார் என்று பலரிடமும் சந்தேகம் நிலவியது. காயம் காரணமாக விலகியிருந்த விருத்திமான் சாஹா மற்றும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறிய தினேஷ் கார்த்திக் போன்றவர்களை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் போட்டியில் களம் கண்டார் பண்ட்.

இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் கண்டிருக்கும் பண்ட், 465 ரன்களை அடித்து 38.75 என்ற சராசரியை வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 73.22 ஆக உள்ளது. ஆஸ்திரேலியா தொடரை பொறுத்தவரை களம் கண்ட நான்கு இன்னிங்சில் 25, 28, 36, மற்றும் 30 ரன்களை அடித்துள்ளார். ரிஷப் பண்ட் டி20 பாணியில் அமைந்திருக்கும் தனது ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் பிரதிபலிப்பதை வரவேற்பதாக மாக்ஸ்வெல் கூறியுள்ளார்.

“பண்ட் ஒரு அசாதாரண வீரர், அனல் பறக்கும் ஆட்டத்தை அங்கு( டெல்லி டேர்டெவில்ஸ்) வெளிப்படுத்தி இருந்தார். அசத்தலான சதத்தையும் அடித்திருந்தார் பண்ட். பெரும்பாலும் சிக்சர்களை குறிவைக்கும் பண்ட், அதை எளிதாக செய்ய முடிகிறது. பிறப்பிலிருந்தே இந்த பலம் வந்திருக்கும் போலும். களத்தில் நிலையாக நிற்காமல் பந்தை நேர்த்தியாக அடிக்கும் வீரர் பண்ட்.” என்று கூறினார் மாக்ஸ்வெல்

அடுத்தது என்ன?

வரும் 26ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பி இருந்த பண்ட் பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங்கில் கீழ் வரிசையில் உள்ள வீரர்கள் நன்றாக பங்களித்தால் அணியின் ஸ்கோரை வலுபடுத்த உதவும்.

Quick Links