2019 ஐபிஎல் ஏலம் : வீரர்களின் இறுதிப் பட்டியல்

Auction starts on Decenber 18
Auction starts on Decenber 18

ஐபிஎல் 12- வது சீசன் அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக அந்தந்த அணியில் ஆடப்போகும் வீரர்களுக்கான ஏலம் துவங்க இருக்கிறது. 2019 ஐபிஎல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளதால், பாராளுமன்ற தேர்தல் காரணமாக தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடைபெறலாம் என தெரிகிறது. ஏனெனில், கடந்த 2009- ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் தென்னாபிரிக்காவிலும் 2014 தேர்தலின்போது ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றதை போல இந்த 12- வது சீசனும் வெளிநாட்டிலே நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் ஏலம் நடைபெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், 8 அணி நிர்வாகங்களும் வீரர்களை தேர்வு செய்ய புதுப்புது யுத்திகளை தீட்டி வருகிறது. இந்த ஐபிஎல் ஏலம், வருகிற 18- ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, 1003 வீரர்கள் ஏலத்தில் பங்கு பெற பதிவு செய்துள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாகம் வெறும் 346 வீரர்களை மட்டுமே பங்கேற்க தேர்வு செய்துள்ளது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் அருணாச்சல பிரதேசம், பாண்டிச்சேரி, பீஹார், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், மேகாலயா, உத்தரகாண்ட் போன்ற ஒன்பது மாநிலங்களில் இருந்து வீரர்கள் முதன்முறையாக தங்களது பெயரை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த வருடம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த கிங்ஸ் XI பஞ்சாப் அணி, தனது முக்கிய நட்சத்திர வீரர்களான யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், அக்சர் படேல் போன்ற வீரர்களை விடுவித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் மேக்ஸ் வெல்- ஐ தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோரும் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு 2019 ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் ஏலம் துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் நிர்வாக கவுன்சில் வெளியிட்டுள்ள இறுதிப்பட்டியலில், 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் 227 பேர் இந்திய வீரர்கள் ஆவர். இதில் 1.5 கோடிக்கு மேல் அடிப்படை தொகையை எந்த ஒரு இந்திய வீரரும் தாண்டவில்லை. மேலும், எட்டு அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் சம்பள தொகையையும் நிர்ணயித்துள்ளது நிர்வாகம். ஏலம் போக வேண்டிய வீரர்களில் அதிகபட்சமாக 2 கோடி வரை அடிப்படை ஏலத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்களான சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், இலங்கையை சார்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, ஆஸ்திரேலிய வீரர்களான ஷான் மார்ஷ் , ஷார்ட், நீயூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் , கோரி ஆண்டர்சன் போன்றோர் இந்த தொகைக்குள் அடங்குவர். மேலும் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரரான ஜெய்தேவ் உனத்கட்டிற்கு 1.5 கோடி என்ற தொகையிலும் யுவராஜ் சிங், அக்ஸர் பட்டேல், முகமது ஷமி, விரித்திமான் சஹா போன்றோர்க்கு அடிப்படை தொகையாக சுமார் 1 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மேலும் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டேல் ஸ்டெயின் மற்றும் மோர்னே மார்க்கல் போன்றவர்களுக்கு 1.5 கோடியையும் இந்திய வீரரான இஷாந்த் ஷர்மாவுக்கு 75 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையான வீரர்களின் விவரங்களுக்கு கீழே இணைத்துள்ள லிங்கை அழுத்தவும்,

ஐபிஎல் ஏலப் பட்டியல்