ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் என்னுடைய ஆட்ட முறைக்கு உகந்தவை - முரளி விஜய்

CXI v India - International 4-Day Tour Match: Day 4
CXI v India - International 4-Day Tour Match: Day 4

கடந்த இங்கிலாந்து தொடரில் முரளி விஜய் சொதப்பியதன் காரணமாக அந்த தொடரில் இருந்து பாதியிலேயே அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். தன்னம்பிக்கையை தவறாத விஜய், கவுண்டி கிரிக்கெட்டில் நன்கு ஆடியதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணியில் இடம்பெற்றார்.

தொடருக்கு முன்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா x1 எதிராக பயிற்சி ஆட்டம் கடந்த சில தினமாக நடைபெற்றுவந்தது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் முதல்நாள் மழையால் ரத்தானது. முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் மட்டும் ரன் எடுக்காமல் சொதப்ப மற்ற வீரர்கள் அனைவரும் அரை சதத்தை எட்டினார். அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

544 என்ற இமாலய ரன்களை குவித்திருந்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1 அணி. தனது இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல் ராகுலும் களமிறங்கினர். இதில் விஜய் அபாரமாக ஆடி 139 பந்துகளில் 129 ரன்கள் எடுத்தார். அவர் ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்து சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த சதத்தினை பற்றி அவர் கூறுகையில் “ நான் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை குவித்தது நல்ல பயிற்சியாக அமைந்தது, எனக்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், பெரும்பாலும் அப்படியே நடந்தது”

மேலும் தனது பங்களிப்பை பற்றி அவர் கூறியதாவது “ நான் தன்னை மேம்படுத்திக் கொள்ள கடினமாக உழைத்து வருகிறேன், ஃபிட்டாகவும் இருந்து வருகிறேன், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த பங்கினை அணிக்கு ஆற்றுவேன்”

ப்ரித்வி ஷா காயமடைந்துள்ள நிலையில், ஓபனிங் குறித்து இந்திய நிர்வாகத்துக்கு சிறிய கலக்கம் இருந்தது. இப்போட்டியில் விஜயுடன் சேர்ந்து கே.எல் ராகுல் நல்ல பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தினார்.

கே.எல் ராகுல் அரை சதம் அடித்து அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஓப்பனிங் குறித்து விடை கிடைத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். இந்திய அணி நிர்வாகமும் குழப்பத்திலிருந்து நீங்கியுள்ளது என்றே கூறலாம்.

தனது ஆட்ட நிலை பற்றி விஜய் கூறியதாவது “நான் தயாராக உள்ளேன் (இங்கிலாந்து தொடருக்கு பின் பல கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது, பின்பு நியூசிலாந்து ஆஸ்திரேலியா டூர் போட்டிகளில் பங்கேற்றது). நான் என்னுடைய அணிக்கு களம் கண்டு சிறந்த தொடக்கத்தை கொடுக்க முயல்வேன்” என்று கூறினார்

“எப்போதும் தனது இலக்காக, அணிக்கு சிறந்த பங்கினை ஆற்றுவது என்றே நினைப்பேன், வரப்போகும் தொடருக்கு முன்பாகவும் அதே நிலைதான்” என்றும் கூறினார்.

CXI v India - International 4-Day Tour Match: Day 4 (கே எல் ராகுல்)
CXI v India - International 4-Day Tour Match: Day 4 (கே எல் ராகுல்)

முரளி விஜய் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நன்கு ஆடி இருந்ததை நினைவு கூர்ந்தார், மீண்டும் ஆஸ்திரேலியாவில் ஆடுவதை பற்றி அவர் கூறியதாவது “ நானும் கே எல் ராகுலும் இந்தியாவிலிருந்து ஒரே பகுதியில் இருந்து தான் வருகிறோம். எனவே எங்களுக்கிடையே நல்ல புரிதல் உண்டு. அவருடன் பேட்டிங் செய்வது ஜாலியாக இருக்கும், வரவிருக்கும் தொடரில் இதேபோல் பங்காற்றுவோம் என்று நம்புகிறேன்.இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறி முடித்தார்.

Quick Links