ஐபிஎல் ஏலம் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சற்று முன்னதாகவே நடக்கப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே நடக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கப்பெறுவதால் ஐபிஎல் போட்டிகள் தென்னாபிரிக்கா இல்லையெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கப்பெறலாம் என்று கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்தில் 70 இடங்களுக்கு சுமார் 346 வீரர்கள் போட்டியிடுகின்றனர். ஐபிஎல் அணிகள் யாரை எடுப்பது என்று பல வியூகங்களை வகுத்துவருகின்றனர்.
ஐபிஎல் 2019 சீசனில் பல மறக்கப்பட்ட வீரர்கள் மீண்டு வர வாய்ப்புள்ளது. சில பிரபலமான வீரர்கள் கடந்த காலங்களின் ஏலத்தில் பங்கேற்க முடியாமல் போயிருந்தாலும் இந்த வருட இறுதி ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஐபிஎல் 2019 தொடரில் மீண்டு வர வாய்ப்புள்ள 5 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
(இத்தொகுப்பானது கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் அசத்தி வரும் வீரர்களின் அடிப்படையில் அமைந்துள்ளது)
#1. வருண் ஆரோன்
இந்தியா களம் கண்ட, அதித வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். வருண் ஆரோன் கடைசியாக 2015-ஆம் ஆண்டு நடந்த சர்வேதேச போட்டியில் இந்தியா அணிக்காக களம் கண்டிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் 2017-ஆம் ஆண்டு களம் கண்டிருந்தார். தனது 21 வயதில் இந்திய அணியில் களம் கண்டிருந்த இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய காரணத்தாலும் காயம் காரணமாகவும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
சிறந்த ஆட்டத்திறனை வருண் பெற்றிருந்தாலும் சர்வேதேச போட்டிகளில் தனது திறத்தை வெளிப்படுத்த தவறியிருந்தார் வருண். இந்தியாவிற்காக 9 ஒருநாள் போட்டிகளிலும் 9 டெஸ்ட் போட்டிகளிலும் களம் கண்டுள்ளார் வருண்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இவர் களம் கண்டிருந்த ஆறு ஐபிஎல் சீசன்களில், 42 போட்டிகளில் வெறும் 38 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் நான்கு வெவ்வேறு அணிகளுக்கு ஆடியுள்ள வருண், எந்த ஒரு அணியிலும் தனது நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி இருந்தார். இதன் காரணமாகவே 2018-க்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.
கடந்த சில மாதங்களாக வருண், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2018/2019 விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்டிற்காக 18 விக்கெட்களை சாய்த்துள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சி தொடரிலும் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 2 இன்னிங்சில் ஐந்து விக்கெட்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#2. பர்வேஸ் ரஸூல்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறந்து பங்காற்றியதால் 2017 ஆம் ஆண்டு இந்தியா டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டு ஒரு போட்டியில் களம் கண்டிருந்தார் ரஸூல்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை 2016ம் ஆண்டு கடைசியாக களம் கண்டிருந்தார் ரஸூல். புனே வாரியர்ஸ் அணிக்காக முதன்முதலில் ஆடிய இவர், ஐபிஎல் தொடரில் வெறும் 11 போட்டிகளில் களம் கண்டிருக்கிறார். 2017 மற்றும் 2018 க்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை எடுக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக நல்ல பர்ஃபார்மன்ஸை கொடுத்துவரும் ரஸூல், ரஞ்சி தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 473 ரன்களை எடுத்து 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 47 ஆக உள்ளது. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார் ரஸூல்.
டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் காணப்படும் நிலையில், இந்த வருட ஏலத்தில் இவர் நல்ல விலைக்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.