சமீப காலங்களில் இந்திய அணியின் ஆகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா உருபெற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறுகிய கால போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றுவரும் ரோகித் சர்மா போட்டிக்கு போட்டி சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 73 என்ற சராசரியை வைத்துள்ள ரோகித் சர்மா, இந்த ஆண்டு 57 என்ற சராசரியை கொண்டுள்ளார். 2019 உலக கோப்பை தொடரில் பத்து இன்னிங்சில் களம் இறங்கி 648 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்தார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் வெற்றியை தீர்மானிக்க கூடிய வீரராகவும் திகழ்ந்துள்ளார். தமது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலங்களில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டு அதன்பின்னர், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியதிலிருந்து தனது அசுர வேக சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எனவே, சர்வதேச குறுகிய கால போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா திகழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்திருக்கின்றது.
#3.சாதனைகளை படைப்பதில் கொண்ட ஆர்வம்:

2007ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் கண்ட ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் ஓரளவுக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளார். அதன் பின்னர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் தொடரில் கூட சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார், ரோகித் சர்மா. தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தை அவ்வப்போது பறி கொடுத்து வந்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டது முதல் இன்று வரை அயராது பாடுபட்டு வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 என்ற சராசரியுடன் 27 சதங்களை விளாசி உள்ளார், ரோகித். மேலும், அதிக ஒரு நாள் சதங்களை கொண்டுள்ள இந்தியர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளை போலவே டி20 போட்டிகளிலும் தமது ஆக்ரோஷ பாணியை கடைபிடிக்கும் ரோகித் சர்மா, 136 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு மலைக்க வைத்துள்ளார். டி20 போட்டிகளில் எத்தகைய வீரரும் புரியாத சாதனையான 4 சதங்களை இவர் விளாசியுள்ளார் என்பது மற்றுமொரு சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல், இவ்வகை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனும் இவரே. டி20 வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வலது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கூட ரோஹித் சர்மா கொண்டுள்ளார்.
#2.எவ்வகை சூழ்நிலைகளையும் திறம்பட கையாளும் ரோகித்:

ஆட்டத்தின் எவ்வகை நேரங்களிலும் எவ்வகை சூழ்நிலைகளிலும் தம்மை ஈடுபடுத்தி வெற்றி காண்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார், ரோகித் சர்மா. இதற்கு உதாரணமாக, தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கும் ரோஹித் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்கள் வரை சில போட்டிகளில் நின்றுள்ளார். மூன்றாவது முறையாக இவர் இரட்டை சதம் கண்ட போதும் கூட ஆட்டத்தின் கடைசி ஓவரில் தான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்கம் நேரங்களில் இந்திய அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்த போதிலும் நம்பிக்கை தளராது தொடர்ந்து ரன்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்துவார், ரோஹித். ஒரு தொடக்க ஆட்டக்காரராக பொறுமையாக ரன்களை குவிக்காமல் தொடர்ந்து அதிரடி பாணியை கையாள்கிறார், ரோகித் சர்மா. தொடக்க ஆட்டத்தை தமக்கு சாதகமாக மாற்றும் திறன் மற்றும் இறுதிக்கட்ட நேரங்களில் அசுரத்தனமான அதிரடியை கையாளும் திறன் என பொதுவாக இவரின் ஆட்டத்தை இருவகையாகப் பிரிக்கலாம்.
#1.திடமான வியூகம் மற்றும் நேர்மறையான அணுகுமுறை:

உலகத்தரமான பேட்ஸ்மேனாக திகழும் ரோகித் சர்மா, பந்துவீச்சாளர்கள் எதிராக சிறப்பாக எதிர்கொள்ளும் திறன்களை தக்க நேரத்தில் வெளிப்படுத்தி அவற்றை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாய் மாற்றியுள்ளார். பெரும்பாலும் இவரது பேட்டிங்கில் நின்று கொண்டிருக்கும் வேளையில், பந்து வீசுவதற்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் சற்று தயங்குவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பந்தின் நேர்கோட்டை நன்கு அறிந்து தகுந்த ஷாட்களை தேர்ந்தெடுப்பதில் மற்ற வீரர்களை விட சற்று மாறுபட்டு உள்ளார், ரோகித் சர்மா. ஷார்ட் வகை பந்துகளையும் கூட எளிதாக கையாண்டு அவற்றை எல்லைக் கோட்டிற்கு வெளியே பல முறை அனுப்பி உள்ளார். மேற்கண்ட காரணங்களாலே உலகின் அபாயகரமான வீரராகவும் ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறை இரட்டை சதம் கண்ட ஒரே வீரர் என்னும் இமாலய சாதனையை கூட தன்னகத்தே வைத்துள்ள ரோகித் சர்மா. இன்னும் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றியை தீர்மானிப்பார் என நம்பலாம்.