1988- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6- ந் தேதி ஒரு சாதாரண ஏஜென்சியில் பணியாற்றும் செக்யூரிட்டியான தந்தைக்கு மகனாய் பிறந்தார், இந்த ஜடேஜா. பின்னாளில் வளர்ந்து இந்திய துணைக்கண்டத்திற்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு உயர்வார் என்று ஒரு போதும் அவரது தந்தை நினைத்திருக்க மாட்டார்.
இளமை கால வாழ்க்கை:
சிறு வயதில் தன் தந்தை மீது மிகுந்த பயத்தை கொண்டிருந்தார், ஜடேஜா. கிரிக்கெட் விளையாட தொடங்கிய ஆரம்ப நாட்களில் இவரது குடும்பத்தின் வறுமை இவரை பெரிதும் வாட்டியது. தொடர்ந்து பள்ளி கிரிக்கெட்டில் விளையாடியதால், பின்னாளில் 14 வயதுக்குட்பட்டோருக்கான சௌராஷ்டிரா அணியில் இடம் கிடைத்தது. மேலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான அணியிலும் இடம் கிடைத்தது. தொடர்ந்து கூச் பெகார் டிராபி மற்றும் வினோ மன்கத் டிராபியில் விளையாடியதால், ஒரு நல்ல ஆல்ரவுண்டராக இவரை செதுக்கியது. மாநில அளவிலான கிரிக்கெட்டில் விளையாடிய போதும் இவரது எண்ணம் தேசிய அணிக்காக விளையாடுவதிலேயே இருந்தது. 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்ததால், முழு கவனத்தையும் தொடர் முழுவதும் செலுத்தியது இவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. இவரது ஆல்ரவுண்ட் திறமையால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. அந்த தொடர் இவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. அதே ஆண்டில் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் ஜடேஜா.
உள்ளூர் போட்டிகள்:
2006 - 2007-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துலிப் டிராபியில் மேற்கு மண்டலத்திற்கான அணி மற்றும் சௌராஷ்ட்ரா அணிக்காக ரஞ்சி டிராபியிலும் பங்கு பெற்றார். இடம்பெற்றார். மீண்டும் 2008ஆம் ஆண்டு மலேசியாவில் துவங்கிய 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில், தொடர் வெற்றிகளால் இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்தித்தது. இவரது பவுலிங் மற்றும் பீல்டிங் திறமையால் உலக கோப்பையை வென்றது இந்திய அணி. அந்த ஆட்டத்தில் இவர் 5 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 2007-2008 -ல் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 48 விக்கெட்களை கைப்பற்றியதால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய சீனியர் அணிக்காக விளையாட அழைக்கப்பட்டார். அந்த தொடரின் கடைசி போட்டியில் தான் இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. எதிர்பாராவிதமாக,அந்த போட்டியில் இந்திய அணி தோற்றது. 2008- இல் ஐபிஎல் முதலாவது சீசன் தொடங்கியது. அந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் அணியின் கேப்டனான ஷேன் வார்னே இவரை, “ராக்ஸ்டார்” என்று அழைத்தார். 2012ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். சென்னை அணி நிர்வாகம் இவரை 2 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தது. மேலும் அந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரரும் இவரே. அந்த ஆண்டு இவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஏனென்றால், இந்தியாவிற்காக ஒரு சிறந்த இளம் ஆல்ரவுண்டரை அந்த ஐபிஎல் தொடர் உருவாக்கி தந்தது.