ஹைதெராபாத்-சென்னை-பெங்களூர் அணிகள் ஏலத்தில் எதிர்பார்க்கவேண்டிய மூன்று வீரர்கள் -ஒரு சிறப்பு கண்ணோட்டம்

மிச்சேல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்
மிச்சேல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்

வழக்கத்திற்கு மாறாக ஐபிஎல்லின் வர்த்தகங்கள் சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை உற்றுநோக்கி ஐபிஎல் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் நிர்வாகம் சற்று முன்னதாகவே அந்தந்த அணிகளின் விருப்பமான பிளேயர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறும் வேண்டப்படாத பிள்ளைகளை ரிலீஸ் செய்யுமாறும் கூறியிருந்தது. இதற்கு நேற்றைய தினம் கடைசி நாளாக இருந்தது. அனைத்து அணிகளும் நேற்றைய தினமே தங்களது இறுதி பட்டியலை வெளியிட்டனர். இப்பட்டியலின் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

வேற்று அணிகளால் ரிலீஸ் செய்யப்பட்ட பிளேயர்களில் யாரை எல்லாம் மேற்குறிப்பிட்ட அணிகள் தேர்ந்தெடுக்கலாம் என்று இத்தொகுப்பு அலசுகிறது.

குறிப்பு : புது பிளேயர்கள் அல்லது கடந்த ஆண்டு விற்காமல் போன வீரர்கள் இப்பட்டியலில் கணக்கிடப்படவில்லை.

#. மிட்சேல் ஸ்டார்க் -சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்

ஆஸ்திரேலியாவின் முன்னணி பவுலராக வலம் வரும் இவர் கடந்த பல வருடங்களாகக் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே பல சர்வதேச போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் ஸ்டார்க் பங்கேற்க முடியாமல் போனது.கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இவர் ௹ 9.4 கோடிக்குக் கொல்கத்தாவால் வாங்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாகக் கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இவர் ஐபிஎல் போட்டிகளில் பெரிதாகக் களம் காணாத போதும் சர்வதேச போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

வேகப்பந்துவீச்சில் முதன்மையான பவுலராக இருக்கும் இவரைக் கொல்கத்தா அணி ரிலீஸ் செய்துள்ளது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதெராபாத் அணிக்கு கேப்டனாகத் தடையிலிருந்து திரும்பும் டேவிட் வார்னர் சார்ஜ் எடுப்பார் என்று தெரிகிறது.அதைத் தான் பயிற்சியாளரான டாம் மூடியும் விரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதெராபாத் அணிக்கு இந்தியா பந்துவீச்சாளர்கள் பொறுத்தமட்டில் புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது, சந்தீப் ஷர்மா,சித்தார்த் கவுல்,பசில் தாம்பி என்று ஓர் படையே அவர்களிடம் உள்ளது. வெளிநாட்டு பந்துவீச்சாளராகப் பில்லி ஸ்டாண்லேக் மட்டுமே உள்ளார்.இருந்தாலும் ஒரு சிறந்த வெளிநாட்டு பந்து வீச்சாளர் அவர்களுக்குத் தேவை.அதுவும் ஸ்டார்க் போன்ற வீரர் அமைந்து விட்டால் ஹைதெராபாத் அணி இன்னும் பலம்பெரும்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் தன் அணி வீரர்களை ஐபிஎல்லின் இரண்டாம் பகுதியில் பங்கேற்கக் கூடாது என்று கெடுபிடி விதித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு ஐபிஎல் நடக்கவிருப்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இம்முடிவை எடுத்துள்ளது . எனவே இவர் சொற்ப போட்டிகளில் ஆடினாலும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஹைதெராபாத் நிர்வாகம் நினைத்தால் சில போட்டிகளில் இவரைக் ஆரஞ்சு ஆர்மியில் காணலாம்.

மீதமுள்ள ஏலப்பணம் : ௹ 9.70 கோடி

பரிமாற்றம் : ஷிகர் தவானை டெல்லிக்கு விற்று அவர்களிடம் அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷாபஸ் நதிம் ஆகியோரை வாங்கியுள்ளது..

காலியிடங்கள் : மொத்தம் 5 --> (3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள்)

#. பேன் லாப்லின் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பேன் லாப்லின்
பேன் லாப்லின்

இது எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் ஆச்சே என்று நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு பதில் ஆம் 2013-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக இவர் ஆடியிருந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் உலகில் நடக்கும் பல்வேறு டி20 லீகுக்களில் பங்கேற்று வருகிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட்டான இவர் சென்னை அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் கண்டுள்ளார். பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அடித்து ஆடுவார். கடந்த ஆண்டு இவரை ராஜஸ்தான் அணி ௹ 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

ஸ்லோ பால் களின் மூலம் பேட்ஸ்மேனின் திசைதிருப்பும் யுக்தியில் இவர் வல்லமைமிக்கவர். தன் பந்துவீச்சில் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்களை மாய்ப்பதில் திறன் பெற்றவர். கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானிற்காக 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கும் இவர் பந்துவீச்சில் சொதப்பும் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருப்பார்.

மீதமுள்ள ஏலப்பணம் : ௹ 18.15 கோடி

பரிமாற்றம் : ஸ்டோய்னிஸே பஞ்சாபிடமிருந்து வாங்கிக்கொண்டு மந்தீப் சிங்கை விற்றுள்ளது. டி காக்கை மும்பைக்கு விற்றுள்ளது.

காலியிடங்கள் : மொத்தம் 10 --> (8 இந்திய வீரர்கள் ; 2 வெளிநாட்டு வீரர்கள்)

#. ஜெயதேவ் உனட்கட் - சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி மற்றும் ஜெயதேவ் உனட்கட்
தோனி மற்றும் ஜெயதேவ் உனட்கட்

எல்லாம் அமைந்துவிட்டாலும் சென்னைக்கு பல காலமாக ஒரு குறை இருந்து வந்துள்ளது அது என்னவென்றால் - ஒரு சிறந்த இந்திய பந்துவீச்சாளர். ஆம் லட்சுமிபதி பாலாஜி-க்கு பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு அமையவில்லை.

மோகித் சர்மா போன்றோர் ஓரிரு போட்டிகளில் சிறந்த பங்காற்றினாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள தவறினர்.அதன் காரணமாக அணியிலிருந்து கழட்டி விடப்பட்டனர்.

கடந்த சீசன் ஏலத்தில் சென்னைக்கு இவர் மீது ஒரு கண் இருந்தது. ஏனெனில் தோனி தலைமையில் புனே அணிக்கு சிறந்த பங்காற்றியிருந்தார். ஏலத்தில் இவரை எடுக்க சென்னை அணியும் பஞ்சாப் அணியும் படும் பாடுபட்டனர் இவரது விலையானது பல கோடிகள் தாண்டியது, இறுதியில் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜஸ்தான் இவரை ௹ 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இவர் விலைக்கேற்ப நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு தலைகீழாகவே அவர் பர்பாமன்ஸ் இருக்க ராஜஸ்தான் அணிக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

எனினும் தோனி எத்தகைய வீரரையும் தனக்கான பாணியில் வழிநடத்த கூடியவர் .எனவே தோனியின் கீழ் புனே அணியில் ஆடிய இவரின் கை மேலோங்கியிருந்தது அதுவே இவரின் விலையின் சாட்சியம். சென்னை நிர்வாகம் இவரை இந்த முறையாவது ஏலத்தில் வெள்ள முனைப்போடு இருப்பர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மீதமுள்ள ஏலப்பணம் : ௹ 8.40 கோடி

காலியிடங்கள்: மொத்தம் 2 ---> (2 இந்திய வீரர்கள் , 0 வெளிநாட்டு வீரர்கள)

வெளியேற்றம் : மார்க் வுட், கஷிட் சர்மா, கனிஷ்க் சேத்