டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு சிறந்த அணி என்றால் பேட்டிங் சிறப்பானதாக இருத்தல் வேண்டும். ஐபிஎல் தொடரில் கடந்த கால வரலாற்றை காணும் போது பெரும்பாலும் பேட்டிங்கில் வலிமையாக திகழும் அணிகளே கோப்பையை வென்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டு திகழும். சென்னை அணி கடந்த சீசனில் வலிமையான பௌலிங் வரிசை இல்லையெனினும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்ததால் சுமாரான பௌலிங்கை வைத்து அந்த அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த வருடமும் அனைவரது கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதுதான் அதிகம் உள்ளது. காரணம் வலிமையான அனுபவ பேட்டிங் வரிசையை சென்னை அணி கொண்டுள்ளது. சில அணிகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் உலகக் கோப்பை அருகில் வரவிருப்பதால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பாதி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பர் என தெரிகிறது.
நாம் இங்கு கடந்த ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து 2019 ஐபிஎல் தொடரில் வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டு உள்ள 3 அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#3 மும்பை இந்தியன்ஸ்

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் அந்த அணியின் மோசமான பேட்டிங். ரோகித் சர்மா சரியான தொடக்கத்தை அளிக்கத் தவறினார். ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டின் தவறான ஷாட் தேர்வு போன்றவை அந்த அணியை பெரிதும் பாதித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குவிண்டன் டிகாக் இனைந்துள்ளார். தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் அசத்தி சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அருமையான தொடக்கத்தை 2019 ஐபிஎல் தொடரில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கடந்த வருடத்தில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஈவன் லிவிஸ் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்துவார். ரோகித் சர்மா மற்றும் பாண்டியா சகோதரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தூண்களாக திகழ்ந்து எதிரணிக்கு மிகுந்த நெருக்கடியை அளிப்பார்கள். இந்தியாவின் சிறந்த ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இடம்பெற்றிருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாகும்.
மேற்கண்ட இந்த பேட்டிங் வரிசை தனியாக நின்று நெருக்கடி சமயங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். மும்பை அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சிதிஸ் லேட் போன்ற வலிமையான உள்ளுர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
#2 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

2018 ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் துனையின்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கானே வில்லியம்சன் அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் , அருமையான கேப்டனாகவும் திகழ்ந்தார்.
நியூசிலாந்து கேப்டன் 2018 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றார். 2019 ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணி சர்வதேச டி20யில் அசத்தி வரும் ஜானி பேரிஸ்டோவ் மற்றும் மார்ட்டின் கப்தில் ஆகியோரை வாங்கியுள்ளது.
டேவிட் வார்னர் 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். இந்த அணி ஏற்கனவே வலிமையான பௌலிங்கை வைத்திருப்பதால் டேவிட் வார்னர், மார்டின் கப்தில், கானே வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோவ் போன்ற வலிமையான பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த சீசனில் சோபிக்கவில்லை. இந்த சீசனில் விஜய் சங்கர் அணிக்கு வந்துள்ளதால் அந்த பிரச்சனையும் நீங்கியது. மனிஷ் பாண்டே மற்றும் தீபக் ஹூடா கடந்த சீசனில் சோபிக்க தவறினாலும் இந்த சீசனில் பெரிய ரன்களை விளாசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவ ஆல்-ரவுண்டர் யூசப் பதான் மற்றும் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா கடைநிலை பேட்டிங்கிற்கு வலிமை சேர்ப்பர்.
#1 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் அணியாக திகழ்கிறது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்த முதலே சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வந்த சென்னை அணி இடையே ஏற்பட்ட சில புகாரினால் மீண்டு வந்து தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை கடந்த சீசனில் வென்றது. அம்பாத்தி ராயுடு, ஷேன் வாட்சன், எம்.எஸ்.தோனி அந்த அணியின் வலிமையான பேட்டிங்காக திகழ்கின்றனர். சுரேஷ் ரெய்னா, டுயுபிளஸ்ஸி, ஷாம் பில்லிங்ஸ் மற்றும் டுவைன் பிராவோ போன்றோர் சென்னை அணியின் கூடுதல் பலமாக திகழ்கின்றனர்.
சென்னை அணியில் கடந்த சீசனில் களமிறங்கிய பேட்டிங் வரிசையுடனே 2019 ஐபிஎல் தொடரிலும் களமிறங்க உள்ளது. ஷேன் வாட்சன் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார். தோனியும் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார். இலங்கைக்கு எதிரான ஓடிஐ தொடரில் அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறார் டுயுபிளஸ்ஸி. ஷாம் பில்லிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 வது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு ஆகியோரின் ஐபிஎல் அணுபவம் சென்னை அணியின் கூடுதல் பலமாகும். கேதார் ஜாதவும் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். இந்த அருமையான பேட்டிங் வலிமையால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.