உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் உலகில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இது போன்ற தொடர்களில் கேப்டன்களின் பங்கு அளப்பெரியது. இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவுகளையும், அணியில் எந்த இடத்தில் யார் விளையாட வேண்டும் போன்ற முடிவுகளை சரியாக கணிக்க வேண்டிய பொருப்பு கேப்டனையே சாரும். பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் நிலைத்தன்மை (கன்சிஷ்டன்ஸி) ஒரு முக்கிய அம்சமாகும். உலகக் கோப்பையில் நிலைத்தன்மை என்பது வேறுபட்டது மற்றும் எந்தவொரு கேப்டனுக்கும் எளிதில் கிடைக்காத வரப் பிரசாதமான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பல கேப்டன்கள் ஒரு அணியை வழி நடத்தினாலும் உலக கோப்பையில் அந்த கேப்டன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொருத்தே அவரின் தரம் உயர்த்தப்படுகிறது. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி நான்கு வித்தியாசமான கேப்டன்களுடன் ஐந்து முறை வென்றுள்ளது. ஆலன் பார்டர், ஸ்டீவன் வாஃக், ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தங்களது நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளனர். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு முறை வெற்றிகளைப் பதிவு செய்து வெற்றிகரமான அணிகளாக உள்ளனர். புகழ்பெற்ற கேப்டன் கிளைவ் லாயிட் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். 1983 ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி அவர்களின் வெற்றிக் கோட்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் எம்.எஸ். தோனி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக கோப்பையை வென்று வரலாற்று சாதனையை மீண்டும் பதிவு செய்தார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை முறையே இம்ரான் கான் மற்றும் அர்ஜுனா ரனதுங்காவுடன் உலகக் கோப்பையை பெற்ற மற்ற இரு அணிகள் ஆகும்.
இந்திய அணியை பொறுத்தவரை பல்வேறு கேப்டன்கள் பல்வேறு இக் கட்டான சூழ்நிலையில் அணியை வழி நடத்திச் சென்றுள்ளனர். ஆனால் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த கபில் தேவ் மற்றும் தோனி மட்டுமே. அந்த வகையில் உலக கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த முதல் ஐந்து கேப்டன்களின் தொகுப்பை காணலாம்.
#5. இம்ரான் கான் (பாகிஸ்தான்-14 வெற்றிகள்)
1992 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தனது இளம் பாகிஸ்தான் அணியை உலக சாம்பியன் அணியாக மாற்றினார். அந்த அணியின் கேப்டன் இம்ரான் கான். உலகக் கோப்பை வென்ற அணியில் வாசிம் அக்ரம், மோயின் கான், இன்சமாம் உல் ஹக் போன்ற இளம் படையினருடன் ஜாவித் மியான்தத், ரமிஸ் ராஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒருசேர கட்டமைத்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1992 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாவதுவீரராக களமிறங்கி 72 ரன்கள் அடித்து அணியை நல்ல நிலைமைக்கு கொண்டுசென்றார். கடினமான சூழ்நிலையில் அழுத்தத்தை கையாள்வதில் இம்ரான்கான் வல்லவர். இவரது தலைமையின் கீழ் 1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.