உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது நாக் அவுட் போட்டியில் தமது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி. இதற்கிடையே மிகுந்த ஏமாற்றமடைந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமும் இந்திய ஆடவர் அணிக்கு தகுதியான புதிய பயிற்சியாளர்களை நியமிக்க ஆயத்தம் காட்டி வருகின்றது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐயின் நிர்வாக குழு கபில்தேவ் உள்ளிட்ட மூன்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பல போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் உள்ளிட்டவை கொண்ட நீண்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அணியின் மூத்த வீரர்களான விராத் கோலி, தோனி மற்றும் பும்ரா ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென விராட் கோலி தான் தொடர்ந்து விளையாட விரும்புவதாக செய்திகள் பரவின. தற்போதைய இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களுக்கு இது போன்ற தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு சற்று வாய்ப்பளிக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சில இளம் வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தினை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளனர். எனவே, நாளை அறிவிக்கப்பட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக உள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.மயங்க் அகர்வால்:
கர்நாடகாவை சேர்ந்த தொடக்க பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்டார். தனது அறிமுக போட்டியான சிட்னி டெஸ்டில் 112 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதுவரை இவர் விளையாடிய மூன்று டெஸ்ட் இனிங்ஸில் 195 ரன்களை குவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியமையால் அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அணியில் இணைந்தார். இருப்பினும், ஒரு போட்டியில் கூட இவர் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியான பங்களிப்பை அளித்ததால் இத்தகைய அதிர்ஷ்டம் மயங்க் அகர்வாலுக்கு அடித்தது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா உடன் இணைந்து அணியின் மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.