இந்திய தேர்வுக்குழு முன்னாள் டி20 சேம்பியனுடான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். நவ்தீப் சைனி முதன் முதலாக ஓடிஐ/டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷீகார் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சகார், புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, தீபக் சகார், கலீல் அகமது.
ஆகஸ்ட் 3 அன்று தொடங்க இருக்கும் இந்த டி20 தொடரானது ஃப்ளோரிடா மற்றும் கயானாவில் நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் டி20 தரவரிசையில் 9வது இடத்தில் இருந்தாலும், மிகவும் வலிமையான டி20 அணி என்பதனை நாம் மறந்திடக் கூடாது. அந்த அணியில் மிகவும் பவர் ஹீட்டர்களான எவின் லிவிஸ், நிக்கலஸ் பூரான், கர்லஸ் பிராத்வெய்ட், ஷீம்ரன் ஹட்மயர் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் கீரன் பொல்லர்ட் மற்றும் சுனில் நரைன் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணியின் கூடுதல் வலிமையாகும்.
அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராக உள்ளது. இதுவரை நிரந்தரமான டி20 வீரர் என யாரையும் இந்திய தேர்வுக்குழு குறிப்பிடவில்லை. இந்த தொடரிலிருந்து இனிவரும் சர்வதேச டி20 தொடர்களில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகிறார்களோ அவர்களே உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெறுவார்கள் என்பதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் மிகவும் கவணத்துடன் செயல்பட உள்ளனர்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI பற்றி காண்போம்.
#1 டாப் ஆர்டர் (ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி)
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் அசத்தி வரும் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் தனித் திறமையுடன் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக ரோகித் சர்மா வலம் வந்தார். அத்துடன் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்ட குறிப்பிட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவராவார்.
எதிர்பாராத விதமாக கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷீகார் தவான். காயத்திலிருந்து குணமடைந்த தவான் மீண்டும் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயராகிவிட்டார். அதிரடி ஆட்டக்காரரான இவர் பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளும் திறன் உடையவர். அத்துடன் இந்திய வலதுகை மற்றும் இடதுகை தொடக்க பேட்டிங் மூலம் எதிரணி பௌலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் திறன் உடையவர்கள் ரோகித் மற்றும் தவான்.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களம் காண உள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவானுடன் கைகோர்த்து அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தும் திறன் உடையவர் விராட் கோலி. 2019 உலகக்கோப்பை தொடரில் ஏமாற்றம் அளித்த விராட் கோலி முன்னாள் டி20 சேம்பியன்களுடனான இந்த டி20 தொடரில் மீண்டும் தனது கேப்டன்ஷீப் திறனை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.