சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில், 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலியா Vs இந்தியா ( 1987 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 270/6 ( 50 ஓவர்கள் )
இந்தியா – 269/10 ( 49.5 / 50 ஓவர்கள் )
1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜீயோப் மார்ஷ் மற்றும் டேவிட் பூன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தொடக்கத்தில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடினர். டேவிட் பூன் 49 ரன்கள் அடித்தார். இறுதிவரை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த, ஜீயோப் 110 ரன்கள் விளாசினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்தது.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுனில் கவாஸ்கர் மற்றும் கிரிஷ் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 78 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த நாவ்ஜோட் சித்து, நிதானமாக விளையாடி 73 ரன்கள் அடித்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியிடம் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. ஆனால் அந்த 2 ரன்கள் அடிப்பதற்குள், இந்திய அணியின் கடைசி பேட்ஸ்மேன் மானின்டர் சிங், போல்ட் ஆகி வெளியேறினார். எனவே ஆஸ்திரேலிய அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
#2) ஆஸ்திரேலியா Vs இந்தியா ( 1992 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 237/9 ( 50 ஓவர்கள் )
இந்தியா – 234/10 ( 47 ஓவர்கள் ) D/L முறை

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜீயோப் மார்ஷ் மற்றும் மார்க் டெய்லர் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த டேவிட் பூன், நிதானமாக விளையாடி 43 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஜோன்ஸ், 90 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாட தவறினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்தது.

இந்திய அணி பேட்டிங் செய்யும் பொழுது மழை குறுக்கிட்டதால், போட்டி 47 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரவி சாஸ்திரி மற்றும் கிரிஷ் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஸ்ரீகாந்த், டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அசாருதீன், சிறப்பாக விளையாடிய 93 ரன்கள் விளாசினார்.
மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வந்த சச்சின் டெண்டுல்கரும், 11 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்து அதிரடியாக விளையாடிய சஞ்ஜேய் மஞ்ஜேக்கர், 47 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த வெங்கடாபதி ராஜு, ரன் அவுட்டாகி வெளியேறினார். எனவே ஆஸ்திரேலிய அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.