கோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேசில் வீரர்கள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேசில் வீரர்கள்

கேப்ரியல் ஜீசஸ் மற்றும் ராபர்டோ ஃபிர்மினோ-வின் அற்புத கோல்களால் அர்ஜெண்டினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்.

முதல் பாதியில் ஜீசஸும் இரண்டாம் பாதியில் ஃபிர்மினோவும் கோல் அடித்து பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த தோல்வியின் மூலம் அர்ஜெண்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை கூட பெற்று தராத மெஸ்ஸியின் சோகக் கதை தொடர்கிறது. 2007 கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு பிறகு இப்போது தான் நேருக்கு நேர் அர்ஜெண்டினாவும் பிரேசிலும் மோதிக் கொண்டன.

“இந்த வெற்றியின் மூலம் எங்கள் குறிக்கோளை அடைவதற்கான அடுத்த படியை எடுத்து வைத்துள்ளோம். பலர் எங்கள் அணி மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் எங்கள் திட்டத்தின் மீதும், உழைப்பின் மீதும் நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தோம். அதற்கான பலனை இப்போது அறுவடை செய்கிறோம்” என போட்டி முடிந்ததும் கூறினார் பிரேசில் அணியின் கேப்டன் டேனி ஆல்வ்ஸ்.

போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்த்த நிலையில் ஆரம்பமே அனல் பறந்தது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரேசில் வீரர் ஜீசஸை டேக்கிள் செய்யப் போய், மஞ்சள் அட்டையை பெற்றார் அர்ஜெண்டினாவின் நிகோலஸ். மற்றொரு புறம் மைதானமும் விளையாடுவதற்கு தகுதியில்லாமல் இருந்ததால் இரு அணிகளுமே மிகவும் சிரமப்பட்டார்கள்.

கோல் அடிக்கும் முதல் வாய்ப்பு அர்ஜெண்டினாவுக்கு கிடைத்தது. ஆனால் 30 அடி தூரத்திலிருந்து லியான்றோ பரடேஸ் அடித்த பந்து கோல் கம்பியின் மேலே சென்றது. போட்டியின் 19-வது நிமிடத்தில் அந்த அற்புதம் நடந்தது. பிரேசில் கேப்டன் டேனி ஆல்வ்ஸ் எதிரணியின் மூன்று வீரர்களை கடந்து பந்தை ஃபிர்மினோவுக்கு கடத்தினார். தன்னிடம் வந்த பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் அற்புதமாக ஃபிர்மினோ க்ராஸ் செய்ய, அதை கோலக மாற்றினார் ஜீசஸ். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

30-வது நிமிடத்தில் கோல் அடிக்கும் மற்றொரு வாய்ப்பு அர்ஜெண்டினாவிற்கு கிடைத்தது. மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக்கை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார் செர்ஜியோ ஆகுவேரா. ஆனால் கோல் போகும் முன் பிரேசில் வீரர்கள் தடுத்துவிட்டனர். இதன் பிறகு மெஸ்ஸியின் ஆட்டத்தில் ஒரு வேகம் தெரிந்தது. பிரேசிலின் தடுப்பாட்டத்தை கடந்து பந்தை ஆகுவேராவிற்கு பாஸ் செய்தார். ஆனால் ஆகுவேரா அடித்த பந்தை கோல் போக விடாமல் உடனடியாக தடுத்து பிரேசிலை காப்பாற்றினார் மார்குயினோஸ். முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மெஸ்ஸி
மெஸ்ஸி

இரண்டாம் பாதி தொடங்கியதும் பிரேசிலுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்க தொடங்கியது அர்ஜெண்டினா. மெஸ்ஸியும் ஆகுவேராவும் எப்போது வேண்டுமானாலும் கோல் அடித்து போட்டியை சமன் படுத்துவார்கள் என்ற நிலையே நீடித்தது. ஆனால் 71-வது நிமிடத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அர்ஜெண்டினாவின் இரண்டு தடுப்பாட்ட வீரர்களை கடந்து, ஃபிர்மினோவிற்கு பந்தை பாஸ் செய்தார் ஜீசஸ். அதை எந்த தவறும் செய்யாமல் கோல் அடித்து பிரேசில் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஃபிர்மினோ. அதன்பிறகு அர்ஜெண்டினா பயிற்சியாளர் பல மாற்றங்களை செய்து பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசி சமயத்தில் பவுலோ டைபாலா-வை களம் இறக்கியும் அர்ஜெண்டினா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், “நாங்கள் தான் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியான அணி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சில சமயங்களில் கால்பந்தில் எதுவும் நியாயமாக நடப்பதில்லை” என குற்றம் சாட்டினார் அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி.

Edited by Fambeat Tamil