2019 ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் புதிய வடிவில் உருவெடுத்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3 முறை ஐபிஎல் சேம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே மைதானத்தில் மார்ச் 26 அன்று மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதுவரை இந்த சீசனில் நடந்த இரு போட்டிகளிலுமே டாஸ் வென்ற கேப்டன்கள் பௌலிங்கையே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் 4 ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை மிட்செல் மெக்லகனை வைத்து வீழ்த்தினர். பின்னர் காலின் இன்கிராம் மற்றும் ஷிகார் தவான் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். 5வதாக களமிறங்கிய ரிஷப் பண்ட் தனது மெகா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை எதிர்கொண்டு 78 ரன்களை விளாசினார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.
சேஸிங்கில் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆனால் பவர் பிளேவிலேயே டெல்லி கேபிடல்ஸ் பௌலர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கீரன் பொல்லார்ட், யுவராஜ் சிங், க்ருநால் பாண்டியா ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் தேவையான ரன் ரேட்டிற்கு சமமாக ரன்களை விளாச தவறினர். இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
நாம் இங்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கான 3 காரணங்களை காண்போம்.
#1 சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இஷான் கிசானை ஆடும் XI-ல் சேர்க்காதது
வான்கடே மைதானம் ஒரு அதிக ரன்களை குவிக்கக் கூடிய மைதானமாகும். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஜார்க்கண்ட் வீரர் இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெறாதது மிகுந்த ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு அளித்தது. சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி 2 சதங்களை விளாசியுள்ளார். அனைவருமே இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் ஆடும் XI-ல் இடம்பெறவில்லை. குவின்டன் டிகாக் விக்கெட் கீப்பராகவும், நம்பர்-3 பேட்ஸ்மேனாக சூர்ய குமார் யாதவும் களமிறங்கினர். விக்கெட் கீப்பங் டிகாக் சிறப்பாக இருந்தது. ஆனால் நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மோசமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்த போட்டியில் தோற்றதிற்குப் பிறகு கண்டிப்பாக இஷான் கிசானை, ரோகித் சர்மா அதிகமாகவே மிஸ் செய்திருப்பார். இஷான் கிசான் ஆடும் XI-ல் இடம்பெற்றால் யுவராஜ் சிங்கிற்கு ஆடும் XI-ல் வாய்ப்பு மறுக்கப்படும். ஆனால் யுவராஜ் சிங் இந்த போட்டியில் அரைசதம் விளாசியதால் அவரை ஆடும் XI-லிருந்து நீக்க அணியின் நிர்வாகம் சுத்தமாக விரும்பாது.